ஓய்வுக்காலத்தில் மாதம் ₹25,000 பென்ஷன்; அசல் குறையாமல் பெறுவது எப்படி?!
திண்டிவனம்: பேருந்து நிலையத்துக்கு வைக்கப்பட்ட கலைஞர் பெயர் நீக்கம் - அதிரடி அரசாணையின் பின்னணி!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கடந்த 55 ஆண்டுக்காலமாகச் செயல்பட்டு வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம், இட நெருக்கடி காரணமாகவும், கட்டடங்கள் பழுதடைந்த காரணத்தாலும் இடிக்கப்பட்டது.
அதையடுத்து தீர்த்தங்குளம் பகுதியில் ரூ.27 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அந்தப் புதிய பேருந்து நிலையத்திற்கு `முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம்' என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி 5-ம் தேதி காணொளி வாயிலாக அந்தப் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, `இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்ற பழைய பெயரையே வைக்க வேண்டும்' என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதே கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம், இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்ற பெயரே தொடர வேண்டும் என மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பிப்ரவரி 4-ம் தேதி திண்டிவனத்தில் நடைபெற இருக்கும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு புதிய பேருந்து நிலையத்திற்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் பெயர் நீக்கப்பட்டு, இந்திரா காந்தி பெயரே தொடர வேண்டும் என அரசாணை வெளியானது.
ஆனால் அந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் தி.மு.கவினர், நேற்று இரவு புதிய பேருந்து நிலையத்தின் முன்பு குவிந்தனர். அதேபோல திண்டிவனம் நகராட்சியின் தி.மு.க நகரமன்ற உறுப்பினர்கள் பேருந்து நிலையத்தின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார் செல்வப்பெருந்தகை.
அந்தப் பதிவில், `திண்டிவனத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் பெயரில் பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அதற்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என்று பெயர் வைப்பதாக அறிவிப்பு வந்தது.
அதையடுத்து இந்திராகாந்தி அவர்களின் பெயரிலேயே பேருந்து நிலையம் தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதை ஏற்றுக்கொண்டு பெயரை மாற்றியிருக்கும் முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.













