ஓய்வுக்காலத்தில் மாதம் ₹25,000 பென்ஷன்; அசல் குறையாமல் பெறுவது எப்படி?!
`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல...' - ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி
வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓட்டுநராகப் பணியாற்றும் நந்தினி என்ற பெண்மணி, இன்று இணையதளங்களில் பலருக்கு உத்வேகம் அளிக்கும் நாயகியாக மாறியுள்ளார்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த நந்தினி, ஒரு 'சிங்கிள் மதர்'. வாழ்வாதாரத்திற்காகப் போராடிக்கொண்டிருந்த இவர், மூன்று குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியையும், பாதுகாப்பான வாழ்க்கையையும் வழங்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன், ஹைதராபாத் நகரத்திற்கு இடம்பெயர்ந்தார். வேறு எந்த உதவியும் இல்லாத நிலையில், தனது ஓட்டுநர் திறமையையே ஆயுதமாக மாற்றிக்கொண்டு, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 'உபெர்' (Uber) ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் சுரேஷ் கொச்சட்டில் என்ற பயணி, நந்தினியின் காரில் பயணம் செய்தபோதுதான் இவரது கதை, பொதுவெளிக்கு வந்தது. நள்ளிரவிலும் அதிகாலையிலும் இடைவிடாது கார் ஓட்டும் நந்தினியின் கடின உழைப்பைக் கண்டு வியந்த சுரேஷ், அவரைப் பற்றிய புகைப்படத்தையும் கதையையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையில், ஒரு பெண்ணாக இரவு நேரங்களிலும் தடையின்றிப் பணியாற்றுவது அத்தனை எளிதானது அல்ல.
ஆனால், "என் குழந்தைகளின் பசியும் அவர்களின் கல்வியுமே எனக்குப் பயத்தைத் தரவில்லை" என்று கூறும் நந்தினி, தினமும் அதிகாலை முதல் இரவு வரை உழைக்கிறார். இவரது மூத்த மகள் தற்போது பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பதும், மற்ற இரண்டு குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Today, I was using cabs to travel from one studio to another for the Union Budget debates. When I booked a @Uber_India cab from Nationalist Hub to 99TV in Hyderabad and two of the drivers cancelled after accepting the booking. @Uber automatically assigned a third driver and I… pic.twitter.com/aR194nbLHE
— Suresh Kochattil (@kochattil) February 1, 2026
நந்தினியின் இந்தக் கதை, "பெண் அதிகாரம்" (Women Empowerment) என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அது செயல் என்பதை நிரூபித்துள்ளது. இந்தச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, உபெர் நிறுவனமும் பொதுமக்களும் நந்தினியின் தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர். "யார் உதவியும் தேவையில்லை, ஒரு பெண்ணால் சுயமாகத் தலைநிமிர்ந்து நிற்க முடியும்" என்பதற்கு நந்தினி ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.
கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தச் சூழலிலும் ஒரு பெண்ணால் வெற்றி பெற முடியும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது, நந்தினியின் போராட்டங்கள் மிகுந்த வாழ்க்கை!



















