இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்...
'இந்தியா ஒரு காலனி அல்ல'- அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தம் குறித்து ஜோதிமணி விமர்சனம்
அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% இருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா.
அதேபோல அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு பூஜ்ஜிய வரி என அறிவித்திருக்கும் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் உலக அளவில் பேசுப்பொருளான நிலையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்த்து வருகின்றன.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில், "இந்தியா ஒரு காலனி அல்ல. ட்ரம்ப் அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்கு முன்:
*அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதித்த வரி: 15–70%
* இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி: 2–3%
இந்த“ஒப்பந்தத்துக்குப்” பிறகு
* அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் வரி: பூஜ்ஜியம்
* இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி: 18%
* இது பேச்சுவார்த்தை அல்ல.
* இது முழுமையான சரணடைதல்.
அமெரிக்கா இப்போது புதிய கிழக்கு இந்தியா கம்பெனியாக இந்தியாவில் நுழைய மோடி அரசு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. இந்தியாவின் செல்வத்தையும் எதிர்காலத்தையும் அமெரிக்காவின் காலடியில் ஒப்படைத்துள்ளது.
இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம்!
இந்திய சந்தைகள் அமெரிக்க விவசாயப் பொருட்கள் ,எரிசக்தி, நிலக்கரி ஆகியவற்றுக்கு அகலமாகத் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்திய விவசாயிகள், சிறு ,குறு,நடுத்தர தொழில்கள், இந்திய தற்சார்பு உற்பத்தி ( Make in India ) அனைத்தும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்க வேளாண் அமைச்சர் கூட, இந்தியாவை அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு ஒரு மாபெரும் புதிய சந்தை என வெளிப்படையாகக் கொண்டாடுகிறார்.
இது ஒவ்வொரு இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம்.
இந்தியா யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதையும் அமெரிக்கா தீர்மானிக்கிறது.

இந்தியா ஒரு காலனி அல்ல...
$500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ‘ஷாப்பிங் லிஸ்ட்’ பற்றி அமெரிக்கா பேசுகிறது.
அவர்கள் இதை “America First” வெற்றி என அறிவிக்கிறார்கள் .
அவர்கள் சொல்வது சரிதான்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு இவ்வளவு நல்லதென்றால்,
ஏன் இதை முதலில் ட்ரம்ப் அறிவித்தார்?
ஏன் பாராளுமன்றம் இருளில் வைக்கப்பட்டுள்ளது?
இந்தியா ஒரு காலனி அல்ல.
அமெரிக்காவுக்கே மட்டும் பயன் தரும் இப்படிப்பட்ட முழுமையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்த ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு ஒப்பந்தத்தின் உண்மையானப் பிரிவுகளை மோடி அரசு தெரிவிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.













