'இந்தியா ஒரு காலனி அல்ல'- அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தம் குறித்து ஜோதிமணி விமர்ச...
Tax War: ரஷ்யாவின் 'வீட்டோ' முதல் ட்ரம்ப்பின் 'சந்தை' வரை... விடையின்றி நிற்கும் கேள்விகள்?!
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும்படியான வேலைகளைச் செய்துவருகிறார். அதே நேரம், திடீர் திடீரென அவரின் சமூக வலைதளங்களில் பற்றவைக்கும் தீ காட்டுத்தீப் போல பேசுபொருளாகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரை நிறுத்தினேன் என்பதில் தொடங்கி, இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்தது, அதை 500 சதவிகிதமாக மாற்றப் போகிறேன் என அறிவித்தது வரை, இந்தியாவின் எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் பா.ஜ.க அரசை விமர்சிக்கும்படியான கன்டென்ட்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

இந்த அறிவிக்கப்படாத வரிப் போரால், ஆசியாவிலேயே அமெரிக்காவின் அதிக வரி விதிக்கப்பட்ட நாடு என்றப் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் இருந்தது. ஆனால், நேற்றைய இரவு அமெரிக்கா அதிபருக்கும் - இந்தியப் பிரதமருக்கும் நடந்த உரையாடலுக்குப் பிறகு இந்தியா மீதான பரஸ்பர வரியை 50 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்கு பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது.
மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ரூ.42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கிறது. மேலும், அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்ககும் வகையிலான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது என இதற்கு இந்தியா கொடுத்த விலை அதிகம் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதே நேரம், இந்தியாவின் இந்த முடிவு தேசிய நலன்களைப் பாதுகாக்கும் மூலோபாய நகர்வு என்றும் சிலர் கருதுகின்றனர்.
இதற்கிடையில், அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒப்புதலால் ரஷ்யாவுக்கு இந்தியா கொடுத்த ஆதரவு நிலைப்பாடு குறித்த கேள்விகளும், இந்தியாவுடன் ரஷ்யா செய்துகொண்ட ஒப்பந்தகளின் நிலையும் தொக்கி நிற்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாடை முன்வைத்து வருகிறது. 'இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்தே தீருவேன்' எனக் கங்கணம்கட்டிக்கொண்டு அதிபராக ஆட்சிக்கு வந்த ட்ரம்ப், தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்த நாடுகளின் மீது வரியை வாரி வழங்கினார். இதனால், கடுமையான சிக்கலை எதிர்க்கொண்ட நாடுகளில் இந்தியாவும் உண்டு.
அப்போதுகூட 'இந்தியா - ரஷ்யா உறவில் எந்த விரிசலையும் ஏற்படுத்த முடியாது' என இருநாடுகளும் பரஸ்பரம் அறிவித்துக்கொண்டன. கடந்த டிசம்பரில் நடைபெற்ற இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டுக்கு வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு கோலகல வரவேற்பளித்து கட்டித் தழுவி மகிழ்ந்தார் இந்தியப் பிரதமர் மோடி.
அந்த உச்சிமாநாட்டின் தொடர்ச்சியாக, ரஷ்ய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி வசதிகளை இந்தியாவில் அமைப்பதற்கு ஆர்வம்காட்டின. எண்ணெய் மற்றும் எரிசக்தித் துறைகளுக்கு அப்பாற்பட்டு, பொறியியல், கப்பல் கட்டுதல், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உலோகம் போன்ற பல்வேறு துறைகளில் உறவுகளை விரிவாக்கும் நோக்கில், இந்தியாவுடன் கூட்டு முயற்சிகளைத் தொடங்க ரஷ்யா திட்டமிட்டது. அதற்காக பல ரஷ்ய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றன.

இது தொடர்பாக அப்போது ரஷ்யாவின் வர்த்தகப் பிரதிநிதி ஆண்ட்ரி சோபோலேவ், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான டிஏஎஸ்எஸ் (TASS) செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``ரஷ்யாவின் அயல்நாட்டுப் பொருளாதாரத் திட்டத்தில் இந்தியா ஒரு முதன்மை இலக்கு. வளம் மற்றும் எரிசக்தி அல்லாத தயாரிப்புகளின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த இரு நாடுகளும் தீவிரமாக உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் $100 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் இருதரப்பு வர்த்தக இலக்கை நோக்கிய முன்னேற்றம் ஊக்கமளிக்கிறது. இந்திய ஏற்றுமதி குறைந்தபட்சம் $30-35 பில்லியனையும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி சுமார் $60-65 பில்லியனையும் கொண்டிருக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுமட்டுமில்லாமல், சமநிலையான உலகை உருவாக்க இரு நாடுகளும் BRICS, SCO மற்றும் G20 போன்ற தளங்களில் இணைந்து செயல்படுகின்றன. இந்தியா அணிசேரா நாடாக இருந்தாலும், வரலாற்றில் ரஷ்யாவுடன் ஒரு ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது. S-400, சுகோய் விமானங்கள் என இந்தியாவின் ராணுவத் தேவைகளில் சுமார் 60 -70 ரஷ்யாவையே சார்ந்துள்ளன. காஷ்மீர் விவகாரம் போன்ற முக்கியமான நேரங்களில், ஐநா சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா தனது 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதரவளித்திருக்கிறது.
உக்ரைன் - ரஷ்யாப் போர் தொடர்பாகக் ஐ.நா-வில் வக்கெடுப்பு நடந்தபோதும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி, ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல், ``இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கிறோம். எந்தப் பிரச்னையானாலும் அமர்ந்து பேசினால் சரியாகிவிடும்" என இந்தியா வெளிநடப்பு செய்துவந்தது.

அதேக் காரணத்தை முன்வைத்து அதிபர் ட்ரம்ப் வரிவித்தபோதும் கூட தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியில் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருந்தது இந்தியா. ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியாவிற்கு எரிபொருள் விநியோகத்தை தடையின்றி தொடரத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
இப்படி இருநாடுகளின் உறவும் பல ஆண்டுகளாக பலமாக இருந்த நிலையில், தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் முடிவை இந்தியா அறிவித்திருக்கிறது. இதற்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யவும் முடிவெடுத்திருக்கிறது.
இது எல்லாவற்றுக்கும் திலகம் வைத்ததைப் போல, பிரதமர் மோடி, ``உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமைத்துவம் மிகவும் அவசியம்" என அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவத்துக்கு பாராட்டு பத்திரம் வேறு வாசித்திருக்கிறார். ஒரே இரவில் இந்தியாவின் இந்த திடீர் அறிவிப்புகளும், இந்த முடிவும் உலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்தியாவின் இந்த முடிவு குறித்து ஆசிய கொள்கை ஆய்வுகளுக்காக இயங்கும் புரூக்கிங்ஸ் மையத்தின் மூத்த ஆய்வாளர் தன்வி மதன், ``சமீபத்திய ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா ஒப்பந்தம், ட்ரம்பின் இந்த திடீர் அறிவிப்புக்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம். தற்போது இந்தியா - அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் எந்தெந்தத் துறைகளுக்குச் சலுகை கிடைக்கும் என்பதில் தான் சிக்கல்கள் இருக்கும்.

அதே நேரம், இந்தியாவுக்கு ரஷ்யாவுடனான நட்புக்கான கேள்வி நீடிக்கிறது. ரஷ்யாவிடமிருந்து தனது எண்ணெய் இறக்குமதி கட்டமைப்பை மாற்றிக்கொண்டிருந்தாலும், இந்தியா தனது உறவுகளை நிலையாக வைத்திருக்கவே விரும்பும்" என தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் முடிவின்படி எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், எதிர்காலத்தில் ரஷ்யா இந்தியாவுக்குத் தரும் ராணுவத் தொழில்நுட்ப உதவிகள், ஐநாவில் தரும் 'வீட்டோ' ஆதரவு பாதிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும், இதுவரை இருநாடுகளுக்கு மத்தியில் போடப்பட்ட ஒப்பந்தகள் என்னவாகும் என்பதும் பொருளாதார அறிஞர்களிடம் இருக்கும் விடைத் தெரியாத கேள்வியாக இருக்கிறது.
ஆனால், இதுவரை இந்தியாவின் இந்த அரசியல் நிலை மாற்றம் குறித்து ரஷ்ய தரப்பிலிருந்தும், ரஷ்யாவுடனான உறவுகள் குறித்து இந்தியா தரப்பிலிருந்து மௌனம் மட்டுமே கிடைத்திருக்கிறது. விரைவில் இருநாடுகளும் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.!


















