ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அத...
`அப்பா இறந்ததோட கேரமும் போயிருச்சுனு.!’ - மரப்பட்டறை டு உலகக்கோப்பை; கேரமில் சாதித்த கீர்த்தனா
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி இந்த மாதம் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா, காஜிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிஃப் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஐவரில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா, மகளிர் ஒற்றைப் பிரிவு, இரட்டையர் மகளிர் மற்றும் குழுப் போட்டி பிரிவு என மூன்று போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். வெற்றிக் களிப்பில் இருக்கும் கீர்த்தனாவிடம் பேசினோம்.

பயம், பதட்டம் எல்லாம் இருந்துச்சு
"முதல் முறையாக சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகிட்டேன். பயம், பதட்டம் எல்லாம் இருந்துச்சு. நான் வெற்றி பெற்ற தருணத்தை விட, ஒவ்வொருத்தரும் என்னை பாராட்டும் தருணம் நெகிழ்ச்சியா இருக்கு. இந்த மகிழ்ச்சியான தருணத்துல நான் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கிறேன்.
வெற்றியை வறுமை தட்டிப்பறிச்சுருச்சு
அஞ்சு வயசுல கேரம் விளையாட ஆரம்பிச்சேன். நான், அண்ணன், தம்பினு நாங்க மூணு பேரு. என் அண்ணனும் கேரம் விளையாடுவான். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்திருக்க வேண்டியவன். ஆனா, அவனோட வெற்றியை வறுமை தட்டிப்பறிச்சுருச்சு. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்போ எங்க அப்பா இறந்துட்டாரு. வீட்ல பயங்கர வறுமை. அம்மா வீட்டு வேலை செஞ்சு எங்களை காப்பாத்தினாங்க.

அதனால அண்ணன் கூலி வேலைக்கு போனான். நான் பத்தாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். படிப்பை பாதியில விட்டேன். கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். மூணு நேரம் சாப்பாடு கிடைக்கிறதே பெரிய விஷயமா இருந்துச்சு. அதனால மேட்ச் பத்தியெல்லாம் வீட்ல பேசவே இல்ல. கேரம் போர்டு பக்கம் போகக் கூட நேரம் இல்ல.
அப்பாவோட கேரம் கனவுகளும் போயிருச்சுனு விட்டுட்டேன். அப்போ என்னோட கேரம் கோச் நித்யராஜன் சார், 'நீ கேரம் விளையாடு. உன் திறமையை மரப்பட்டறையில வீணடிக்காத'னு சொன்னாரு. கேரம் விளையாட ஊக்கம் கொடுத்தார்.
சில போட்டிகளுக்கான செலவுகளையும் அவர் ஏத்துக்கிட்டார். அதனால திரும்பவும் கேரம் விளையாட ஆரம்பிச்சேன். தேசிய அளவிலான ஒரு போட்டியில் மூன்றாம் பரிசு வாங்குனேன். அதனால இந்திய விமான நிலைய ஆணையத்திலிருந்து ஒரு வருடத்திற்கான ஸ்காலர்ஷிப் கிடைச்சுது. ஒரு வருஷம் முடிஞ்சதும் மீண்டும் வறுமை.
ஒரு தனியார் பள்ளிக்கூடத்துல கேரம் பயிற்சியாளரா சேர்ந்தேன். எட்டாயிரம் சம்பளம் கொடுத்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேமிச்சு, தண்டையார்பேட்டையில ஒரு கேரம் பயிற்சி வகுப்பை ஆரம்பிச்சேன். மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக்கிட்டே, நானும் போட்டிகளுக்குத் தயார் ஆனேன். போன வருஷம் தேசிய அளவிலான போட்டியில் தங்கம் ஜெயிச்சேன்.

உலகக் கோப்பை போட்டிக்கு தேர்வாகி இருக்கேன்னு சொன்னதும் மகிழ்ச்சியைவிட பொருளாதாரம் சார்ந்த யோசனைகள்தான் அதிகமா இருந்துச்சு. குடும்பமே கலங்கி நின்னோம். காசு இல்லாம திறமையை வெச்சு என்ன பண்றதுனு ஃபீல் பண்ணேன். அப்போ தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னை நேரில் சந்திச்சு ஒன்றரை லட்சம் பணம் கொடுத்தாங்க. கவலையை மறந்து விளையாடினேன். தொடர் முயற்சியும், உழைப்பும் சக்சஸை சாத்தியமாகியிருக்கு" என்று தம்ஸ் அப் செய்து விடைபெறுகிறார் கீர்த்தனா.!














