கேரளம்: பினராயி விஜயனின் வீடு, மருமகன் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் இடி ரெய்டு - ப...
"அப்போ அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை; இப்போ.."- மூன்றாவது டாக்டர் பட்டத்தைப் பெற்ற மம்மூட்டி
நடிகர் மம்மூட்டி, தற்போது அவருடைய மூன்றாவது கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்திய சினிமாவிற்கு மம்மூட்டி ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்திருக்கிறது.

கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மம்மூட்டிக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
டாக்டர் பட்டம் பெற்றபின் மேடையில் பேசிய மம்மூட்டி, "என்னுடைய தந்தை என்னை ஒரு உண்மையான மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஆனால், அவர் உயிரோடு இருந்தபோது என்னால் அவரது ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இன்று எனக்குக் கிடைத்திருக்கும் மூன்றாவது டாக்டர் பட்டம் இது. என்னால் மருத்துவ ரீதியாக மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் போயிருக்கலாம்.
ஆனால், கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக எனது திரைப்படங்கள் மூலமாக உங்களை மகிழ்வித்து, உங்களது மனங்களைக் குணப்படுத்தி வருகிறேன் என்று நம்புகிறேன். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இதை நான் தொடர்ந்து செய்வேன்" எனப் பேசியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்திலும், "மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மறக்க முடியாத பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இது நடிகர் மம்மூட்டிக்கு மூன்றாவது டாக்டர் பட்டம். இதற்கு முன் கேரளப் பல்கலைக்கழகம் மற்றும் காலிகட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்தும் கடந்த 2010-ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



















