காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்; திருப்பதிக்கு நிகர...
அமெரிக்கா மட்டுமே சந்தையில்லை, இந்திய - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் பொருளாதாரத்துக்குப் புதிய வாசல்!
வர்த்தகப் போர்கள், வரிப் போர்கள் என உலக நாடுகளுக்கிடையே நடக்கும் அரசியல் சண்டைகளால், ஒட்டுமொத்த உலக வர்த்தகமுமே கேள்விக்குறியாகி வருகிறது. இச்சூழலில், இந்திய - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் நமக்குப் புதிய நம்பிக்கை தந்திருக்கிறது.
இந்தியா மீது அமெரிக்க அதிபர் தொடுத்து வரும் வரிப் போர்களால் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. நம் 18% ஏற்றுமதி அமெரிக்காவை நம்பி இருப்பதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். இந்தப் பின்னணியில்தான், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்கு அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல் சந்தை வாய்ப்புகளை விரிவுசெய்ய வேண்டிய காலச்சூழலில், இந்திய அரசு பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது பாராட்டத்தக்க விஷயம்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய இங்கிலாந்துடன் ஏற்கெனவே இந்தியா வெற்றிகரமாக வர்த்தக ஒப்பந்தம் போட்டிருக்கிறது. தற்போது, ஐரோப்பிய யூனியனுடன் பல ஆண்டுகளாக நடந்துவந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக மதிப்பு, சுமார் 136 பில்லியன் டாலர். இதில் இந்தியாவின் ஏற்றுமதி 75.8 பில்லியன் டாலர்; இறக்குமதி 60.7 பில்லியன் டாலர். ஒப்பீட்டளவில், அதிகமான ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டுவருகிறது. எனவே, இந்தியாவுக்கான பலன் கூடுதலாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த ஒப்பந்தத்தால், சுமார் 99% இந்தியப் பொருள்களுக்கு ஐரோப்பிய சந்தையில் முன்னுரிமை கிடைக்கும். இந்திய ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளிலும் தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். மேலும், சுமார் 90% இந்தியப் பொருள்களுக்கு ஐரோப்பிய யூனியனில் 0% வரியே விதிக்கப்படும். மற்ற பொருள்களுக்கும் படிப்படியாக வரி குறைக்கப்படும். இதன்மூலம் ஜவுளி, காலணிகள் மற்றும் தோல்பொருள்கள், நகைகள் மற்றும் ரத்தினங்கள், கடல் உணவுப் பொருள்கள், கெமிக்கல்ஸ், கன்ஸ்யூமர் கூட்ஸ் உள்ளிட்ட துறைகள் பலனடையும்.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலையுயர்ந்த கார்கள், மருந்துகள், விமான பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், ஸ்டீல் போன்றவற்றின் விலையும் குறையும். இது இந்தியர்கள் உயர்தரமான பொருள்களை குறைந்த விலையில் பெறுவதற்கு வழிவகுக்கும்.
வளர்ச்சிக்கும், வர்த்தகத்துக்கும் சில நாடுகளையே நம்பியிருக்கும் நிலையை மாற்ற, பல்வேறு நாடுகளுடனான வர்த்தக உறவைப் பேணுவது மிகவும் அவசியம். ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தம், அதற்கான தொடக்கமாக இருக்கட்டும். இந்தியப் பொருளாதாரத்தின் வாசல்கள் இன்னும் விசாலமாகட்டும்!
- ஆசிரியர்















