”அண்ணாமலை போன்ற ஒரு நல்ல தலைவரை பாஜக புறந்தள்ளிவிட்டது” - பாஜக நிர்வாகி ஆதங்கம்
``இந்தியாக் கூட்டணியின் கூட்டத்திற்கு திமுக வராததற்குக் காரணம் இதுதான்" - திருமாவளவன் பளீச்
டெல்லியில் நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில், ``டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியாக் கூட்டணி தலைவர்களின் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் எடுத்துள்ள முடிவு கவலையளிக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாள்களிலேயே, தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் இந்தத் தனிச்சன்னிச்சையான முடிவு தி.மு.க-வைப் பெரும் அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
இதன் காரணமாகவே இன்றைய ‘இந்தியாக் கூட்டணி 'கூட்டத்தை தி.மு.க புறக்கணித்துள்ளது.

இருப்பினும், ‘இந்தியாக் கூட்டணி'யுடன் இணைந்து வருங்காலத்தில் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். கூட்டணியில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் காங்கிரஸால் தன்னிச்சையாக த.வெ.க-வை அழைக்க முடியாது.
‘இந்தியா’ கூட்டணியின் மூத்த தலைவர்கள் எதிர்காலத்தில் த.வெ.க-வை கூட்டணியில் இணைக்க முடிவு செய்தால், அதை வி.சி.க முழுமனதோடு வரவேற்கும். தமிழகத்தில் அமைந்துள்ள புதிய த.வெ.க அரசு இன்னும் 3 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் பேசியிருக்கிறார் என்றால் அது அவரின் தனிப்பட்ட அனுமானமாக இருக்கலாம்.
ஆனால், அப்படி நான் கருதவில்லை. மேலும், தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் த.வெ.க அரசு அமையவும், அது ஸ்திரத்தன்மையுடன் நீடிக்கவும் ஆதரவு அளித்துள்ளதால், இந்த அரசு தனது ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்யும்.
தற்போது தமிழகத்தில் திமுக தலைமையில் எந்தவொரு மதச்சார்பற்ற கூட்டணியும் இல்லை; விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல் என அனைத்துக் கட்சிகளும் தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. தி.மு.க மட்டுமே தற்போது தனித்து நிற்கிறது. தமிழக அரசியல் களம் புதியதொரு திசையை நோக்கி நகர்வதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன" என்றார்.














