இந்திரா காந்தி டு மோடி வரை; தேசிய அரசியலில் திமுக-வின் கதாபாத்திரம் என்ன? - விரி...
"ஹிட்லர்தான் எனது உத்வேகம்" - சர்ச்சையான தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு; பாஜக கண்டனம்!
பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற 'தி இந்து' நாளிதழின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்ட 'ஹைட்ரா' (HYDRAA) அமைப்பு குறித்துப் பேசினார். அப்போது, ``அடால்ஃப் ஹிட்லருக்கு மிகவும் பிடித்த வார்த்தை 'ஹைட்ரா'. யாரை வேண்டுமானாலும் படுகொலை செய்யக்கூடிய அவரது முக்கியக் குழுவிற்கு 'ஹைட்ரா' என்றுதான் பெயரிடப்பட்டது. ஹிட்லரின் அந்த அமைப்பை உத்வேகமாகக் கொண்டுதான், நான் இந்தத் திட்டத்திற்கு 'ஹைட்ரா' என்று பெயரிட்டேன்" எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த அமைப்பின் இடிப்பு நடவடிக்கைகளை ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்ச் சேதங்களுடனும் ஒப்பிட்டுப் பேசினார்.

ஜனநாயக நாட்டின் முதலமைச்சர் ஒருவர், உலகமே வெறுக்கும் ஒரு பாசிச சர்வாதிகாரியைத் தங்களுக்கு உத்வேகம் என்று பொதுமேடையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ``ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்து அதிர்ச்சியளிப்பதோடு, ஜனநாயக சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம். உலகம் கண்ட மிகப்பெரிய பாசிசவாதியை பகிரங்கமாக வழிபடும் ஒரு முதலமைச்சரைக் காங்கிரஸ் கட்சி கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
யாரை வேண்டுமானாலும் கொல்லக்கூடிய ஹிட்லரின் கொடூரமான அமைப்பைத் தனக்கு உத்வேகம் என்று ஒரு முதலமைச்சர் கூறுவது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தல்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில், "ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்துக்கள் காங்கிரஸின் ஆபத்தான ஹிட்லர் மற்றும் அவசரநிலை கால மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. அவசரநிலை முதல் ஹிட்லர் வரை - காங்கிரஸ் எப்போதும் மக்களின் குரலை ஒடுக்கவே நினைக்கிறது. தனது பேச்சுக்காக தெலங்கானா மக்களிடம் ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகத் தெலங்கானா அரசால் உருவாக்கப்பட்ட இந்த ஹைட்ரா அமைப்பு. ஏற்கனவே பல சட்டவிரோத இடிப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகத் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்களுக்கும், சட்டரீதியான ஆய்வுகளுக்கும் உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
















