இந்தியா கூட்டணி: ``மோடி அரசை வீழ்த்த ஒற்றுமை அவசியம்!" - மல்லிகார்ஜுன கார்கே
TASMAC: விகடன் செய்தி எதிரொலி... உடனடியாக மூடப்பட்ட முதல்வர் விஜய் தொகுதி டாஸ்மாக் கடை!
விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியின் எதிரொலியாக முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் பள்ளி மற்றும் சர்ச் அருகேயிருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுவிட்டது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று முதல்வராக விஜய் பதவி ஏற்றதும், ''பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும்" என்ற அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்புக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்த அதேநேரம், அந்த நடவடிக்கை ரொம்பவே மந்தமாக நடைபெறுவதாகவும் ஒருசாரார் குறைபட்டுக் கொண்டனர்.
இந்தப் பின்னணியில் அரசாணை வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த பிறகும் சில இடங்களில் மேலே சொன்னபடி மதுக்கடைகள் அப்புறப்படுத்தப் படாமல் இருப்பதாக மக்கள் சிலர் நம்மிடம் புகார் தெரிவிக்க, முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியின் கொடுங்கையூரில் பள்ளி, சர்ச் இரண்டுக்கும் மிக அருகில் இருந்த டாஸ்மாக் கடை ஒன்று தொடரந்து இயங்கி வந்தது கண்டு நேரடியாக அங்கு விசிட் செய்தோம் நாம்.
மூலக்கடை மேம்பாலத்திலிருந்து கொடுங்கையூருக்குள் செல்லும் சாலை முடிவடையும் இடத்தில் வலதுபுறம் திரும்பினால், நான்கைந்து கடைகள் தாண்டி எண் 18, காமராஜர் நகர், கொடுங்கையூர் என்ற விலாசத்தில் அந்த இரண்டாம் எண் கடைதான் அது.
கடையிலிருந்து நான்கு கட்டடங்கள் கடந்தால், ஒரு தேவாலயமும் அதன் எதிரே விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியும் இருக்க கடை தொடர்ந்து இயங்கி வந்தது குறித்து கடையின் மேலாளரிடமே பேசி செய்தி வெளியிட்டோம்.
'முந்தைய ஆட்சியில் பள்ளி, ஆலயங்களில் இருந்து 50 மீட்டருக்குள் மதுபானக் கடைகள் இருக்க கூடாதுனு இருந்தது. இந்தக் கடை சர்ச், அந்தப் பள்ளி ரெண்டுல இருந்தும் 65 மீட்டர் தூரத்துல இருக்கு.
புது அரசு வந்ததும் 50 மீட்டரை 500 மீட்டர்னு மாத்தினாங்க. ஆனா அப்படி மாத்திட்டு லிஸ்ட் பண்ணின 717 கடைகளில் இந்தக் கடை வரவில்லை. அதுக்கான காரணத்தை நீங்க அதிகாரிகள் மட்டத்துலதான் கேக்கணும். வேறு இடம் பார்த்து கடையை மாத்தச் சொல்லி உத்தரவு வந்துட்டா நாங்க மாத்த தயாரா இருக்கோம்' என்றார் அந்த மேலாளர்.
'கடையில் தினமும் பன்னிரண்டு மணி ஆனாலே குடிக்கக் கூட்டம் கூடிவிடும். சாயங்காலம் கேட்கவே தேவையில்லை. முதலமைச்சர் அறிவிப்பு வந்தபோது, 'அப்பாடா, ஒருவழியாக இந்தத் தொல்லை ஒழிந்தது' என்று நினைத்தோம். ஆனால், நேற்றும் கடை இருந்தது. இன்றும் இருக்கும். கடை காலியாகும் அறிகுறியே தெரியவில்லை' எனத் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டியிருந்தனர் அந்தப் பகுதி மக்கள்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் சம்பந்தப்பட்ட அந்தக் கடை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப் பட்டுள்ளது.

கடையின் அருகே இறைச்சிக் கடை வைத்திருந்தவரிடம் பேசினோம்.
''ரெண்டு நாள் முன்னாடியே வந்து கடையைக் காலி செய்துட்டாங்க. பள்ளிக் கூடம் பக்கத்துல மதுக்கடைகள் இருக்கக் கூடாதுன்னுஅரசு போட்ட உத்தரவுப்படி காலி செய்வதாகச் சொன்னாங்க. இந்தக் கடையால் இந்தப் பகுதி இரவு நேரங்களில் ட்ராபிக் பிரச்னை இருந்தது. தவிர பொதுமக்கள் நடமாட அச்சப்பட்ட ஒரு சூழலும் இருந்தது. அந்த வகையில் அரசின் நடவடிக்கை மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்னு உறுதியாச் சொல்லலாம்'' என்றார் அவர்.
பிரச்னைகளைச் சுட்டிக் காட்டினால் துரித நடவடிக்கை என்கிற அரசின் நல்ல நடவடிக்கை தொடரட்டும்.

















