"ஹிட்லர்தான் எனது உத்வேகம்" - சர்ச்சையான தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்ச...
இந்தியா கூட்டணி: திமுக-காங்கிரஸ்-க்கு இடையே விரிசல்; அழைக்கப்படாத தவெக! - என்ன நடக்கிறது?
சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் பின்னடைவுகளுக்குப் பிறகு, தங்களின் அடுத்தகட்ட அரசியல் உத்திகளை வகுக்கவும், ஒற்றுமையை வெளிப்படுத்தவும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி' இன்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 23 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சி காணொளி வாயிலாக இதில் கலந்துகொள்கிறது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இதுவரை அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விளக்கமளித்துள்ள காங்கிரஸ் தரப்பு, `தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத கட்சிகளுக்கு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படுவதில்லை' என்று தெரிவித்துள்ளது.
த.வெ.க-விடம் தற்போது எம்.பி.க்கள் யாரும் இல்லை என்பதும், தமிழ்நாட்டில் தங்களுக்குக் கிடைத்த ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியிடத்தையும் அவர்கள் தங்களின் கூட்டாளியான காங்கிரஸுக்கே விட்டுக் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த தி.மு.க, இந்த டெல்லி கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தங்களை விடுத்து விஜய்யின் த.வெ.க-வுடன் கைகோத்து கூட்டணி ஆட்சி அமைத்ததை "முதுகில் குத்திய துரோகம்" என விமர்சித்துள்ள தி.மு.க, இந்தியா கூட்டணியில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாகவும், இனி அதன் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தை புறக்கணித்த திமுக-வை விமர்சித்த, மதுரை மத்திய தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ. வி.எம்.எஸ். முஸ்தபா செய்தியாளர்களிடம் பேசுகையில், "தி.மு.க ஏன் இந்த நாடகத்தை ஆடுகிறது? ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் அவர்கள் என்ன ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்? மத்திய பா.ஜ.க அமைச்சரவையில் என்னென்ன பதவிகளைக் கேட்கிறார்கள்? தி.மு.க இப்போது ஆர்.எஸ்.எஸ்-சின் கையாள் என்பது அம்பலமாகிவிட்டது" என்று சாடினார்.
த.வெ.க-வின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள தமிழக பா.ஜ.க-வின் இளைஞர் அணித் தலைவரான வினோஜ் பி. செல்வம், ``இந்தியா கூட்டணி முற்றிலும் சிதறிவிட்டது. தி.மு.க தமிழகத்தில் சின்னாபின்னமாகிவிட்டது, காங்கிரஸ் ஒரு பிராந்தியக் கட்சியாக சுருங்கிவிட்டது. த.வெ.க-வை பொறுத்தவரை, அது இன்னும் தி.மு.க-வின் தயவில்தான் இயங்குகிறது. அதனால்தான் மக்கள் அதை 'தி.மு.க 2.0' என்று அழைக்கிறார்கள். தொடர்ந்து பல தோல்விகளைச் சந்தித்த பிறகும், இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்னும் பா.ஜ.க-வை நோக்கி விரல் நீட்டுவது வேடிக்கையாக இருக்கிறது" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.



















