நாகை: செயின் திருட்டில் சிக்கிய தவெக பொறுப்பாளர்; தங்கை திருமணச் செலவுக்குத் திர...
இந்தியா கூட்டணி: ``மோடி அரசை வீழ்த்த ஒற்றுமை அவசியம்!" - மல்லிகார்ஜுன கார்கே
டெல்லியில் திங்கட்கிழமை (இன்று) எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி'யின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய முக்கிய கூட்டணிக் கட்சிகள் இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாலும், கூட்டணியில் காங்கிரஸின் செயல்பாடு குறித்து சில கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 23 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, விசிக தலைவர் தொல். திருமாவளவன், என்சிபி எம்பி சுப்ரியா சுலே உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர். அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக கட்சிக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் தலைவர்களை வரவேற்றுப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் கூட்டணியின் பலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
குறிப்பாக, கடந்த ஏப்ரல் 17 அன்று மக்களவையில் அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிப்பதற்காக அனைத்து கூட்டணிக் கட்சிகளும் கைகோர்த்து உறுதியுடன் நின்றன. இப்போது நாம் அந்த ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும். மத்தியில் ஆளும் மோடி அரசின் கீழ் நாடு எதிர்கொண்டு வரும் அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த சவால்களை முறியடிக்க எதிர்க்கட்சிகளின் பலத்த ஒற்றுமை அவசியம். SIR நடைமுறை என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தவும், பழிவாங்கவும் மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரச் சூழல் மிகவும் மோசமாக உள்ளது. இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போதிய முதலீடுகள் இல்லை. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நீட் மற்றும் CBSE போன்ற பொதுத் தேர்வுகளை மத்திய அரசு கையாண்ட விதம், லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்துக்கு துரோகம் இழைத்துள்ளது." எனக் கடுமையாக சாடினார்.
















