இந்தியாவின் ரயில் பாதைகள், சாலைகளில் சோலார் பேனல்! - இங்கு வொர்க்-அவுட் ஆகுமா?
"இந்த விழிப்புணர்வை உலகெங்கும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும்..!" - நடிகை சமந்தாவின் புதிய பிசினஸ்
திரைப்பிரபலங்கள் பலரும் சினிமாவைத் தாண்டி பல்வேறு பிசினஸ்களை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான திரைப்பிரபலங்கள் சொந்தமாகவே உணவகங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களைத் தாண்டி இன்னும் பலர் பல்வேறு துறைகளில் அவர்களின் பிசினஸைத் தொடங்கிச் சிறப்பாகவே நடத்தி வருகிறார்கள்.
அதோடு, வளர்ந்து வரும் பிராண்டுகளிலும் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை சமந்தா தற்போது புதிய பிசினஸ் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். ஏற்கெனவே அவர் சில பிசினஸ்களைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
அதோடு, இப்போது 'ஜாய்' எனப்படும் பெண்களுக்கான மாதவிடாய் மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பு பிராண்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
மகேஸ்வரி மூர்த்தி என்பவரும், நடிகை சமந்தாவும் இணைந்து இந்த புதிய பிராண்டைத் தொடங்கியிருக்கிறார்கள்.
'Antibacterial Sanitary Pads', 'Herbal Sanitary Pads', 'Herbal Wellness Liners', 'Disposable Period Panties', 'Reusable Menstrual Cups', 'Reusable Period Panties' ஆகிய பொருள்கள் இந்த பிராண்டிலிருந்து இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த புதிய பிசினஸ் குறித்து நடிகை சமந்தா, "என்னுடைய ஆரோக்கிய வாழ்க்கையில் மாதவிடாய் காலத்தில் நாம் பயன்படுத்தும் பொருள்கள் குறித்து நாம் எவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதை நான் கவனித்தேன்.
மாதந்தோறும் நம் உடலோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் ஒரு பொருள் எதனால் தயாரிக்கப்படுகிறது, அது நம் ஆரோக்கியத்தை எப்படிப் பாதிக்கிறது என்ற கேள்விகளை நாம் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்.
ரசாயனங்களின் பாதிப்பைக் குறைத்து, பெண்களின் சௌகரியத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரும் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஜாய் (ZOY) நிறுவனத்தின் லட்சியம்தான் என்னை இதில் இணைய வைத்தது.
வெறும் தயாரிப்புகளைத் தாண்டி, சுழற்சி ஆரோக்கியம் (Cycle Wellness) குறித்த ஒரு பெரிய உரையாடலை நாம் உருவாக்க விரும்புகிறோம்.
மாதவிடாய் சுழற்சியைப் புரிந்துகொள்வது, அது பெண்களின் ஆற்றலையும் மனநிலையையும் அன்றாட வாழ்க்கையையும் எப்படிப் பாதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது, உடலுக்கு எதிராகச் செயல்படாமல் உடலின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேலை செய்வது போன்ற விஷயங்கள் இன்னும் அதிக கவனத்தைப் பெற வேண்டும்.
இந்த நிறுவனம் மூலமாக இந்த விழிப்புணர்வை உலகெங்கும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கொண்டு சேர்க்க நாங்கள் நம்புகிறோம்," எனத் தெரிவித்திருக்கிறார்.



















