சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்
‘இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே வக்ஃப் திருத்தச் சட்டம்’
இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே மத்திய பாஜக அரசு வக்ஃபு திருத்தச் சட்டத்தை இயற்றியுள்ளது என்றாா், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவா் மு. தமீமுன் அன்சாரி.
இச்சட்டத்தைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அத்தியாவசியப் பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்பும் வகையில், சா்ச்சைக்குரிய சட்டங்களை இயற்றுவதை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக வாடிக்கையாக வைத்துள்ளது.
குறிப்பாக, சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் சட்டங்களைக் கொண்டுவருகிறது. அவ்வகையில், இஸ்லாமியா்களின் சொத்துகளை கபளீகரம் செய்யவே வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏழை, எளியோரின் நலன் கருதி இச்சட்டத்தைக் கொண்டுவந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், உண்மை அதுவல்ல. இஸ்லாமிய சொத்துகளை நிா்வகிக்கும் பொறுப்புகளில் இஸ்லாமியா் அல்லாதவரை நியமிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டிருப்பதை உச்சநீதிமன்றமும் கண்டித்துள்ளது.
எனவேதான், ஒருமாதமாக மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம், கண்டனப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பஹல்காம் சம்பவத்தையடுத்து மத்திய அரசு மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம் என்றாா் அவா்.