மேகதாது: `தமிழர்களுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்கக் கூடாது என்பதில்...' - அம...
உபி: 15 வயதில் திருமணம்; 22 வயதில் 5 குழந்தைகள்: ஆண் குழந்தைக்காக 6-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்
வட மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் ஆந்திரா அரசு அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் வெறும் 22 வயதேயான ஒரு பெண்ணிற்கு 5 குழந்தைகள் இருப்பதை கேட்டு டாக்டர் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள பாரவுட் என்ற மாவட்டத்தில் இருக்கும் பாக்பட் என்ற இடத்தில் இருக்கும் ஸ்பாண்டன் மருத்துவமனைக்கு 22 வயது கர்ப்பிணி ஒருவர் தன்னுடைய கணவருடன் பரிசோதனைக்காக வந்தார்.
அவரை டாக்டர் பிரக்யா சோதனை செய்தார். அத்தம்பதியிடம் டாக்டர் பேசியபோது அப்பெண்ணிற்கு 22 வயதாகிறது என்றும், ஏற்கெனவே 5 குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். வயிற்றில் இருப்பது ஆறாவது குழந்தை என்று தெரிவித்தனர். ஐந்து பேரில் 4 பேர் பெண் குழந்தைகள் என்றும், ஓர் ஆண் குழந்தை என்றும் தெரிவித்தனர்.

டாக்டர் அப்பெண்ணிடம் பேசியபோது, ``எனக்கு தொடர்ந்து பெண் குழந்தை பிறக்கிறது. ஓர் ஆண் குழந்தை மட்டும்தான் இருக்கிறது. எங்களுக்கு மேலும் ஓர் ஆண் குழந்தை தேவை" என்று தெரிவித்தார். அருகில் நின்ற அப்பெண்ணின் கணவர், ``குடும்பத்தைக் காப்பாற்றவும், சந்ததியை எடுத்துச் செல்லவும் ஓர் ஆண் குழந்தை போதாது" என்று தெரிவித்தார்.
இவ்வளவு இளம் வயதில் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து டாக்டர், தம்பதியினரை எச்சரித்தார். டாக்டரின் கூற்றுப்படி, அந்தப் பெண் ஏற்கெனவே மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் மற்றும் உடல் வலி இருப்பதாகத் தெரிவித்து இருந்தார் - பொதுவாக உடல் சோர்வு, ரத்த சோகை மற்றும் நெருங்கிய இடைவெளி கர்ப்பத்தால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் தொடர்புடைய அறிகுறிகள் அப்பெண்ணிடம் காணப்பட்டது. ``தொடர்ச்சியாக குழந்தை பெற்றுக்கொள்வதால் உங்கள் உயிரைப் பணயம் வைக்கிறீர்கள்" என்று டாக்டர் அப்பெண்ணை எச்சரித்தார். முந்தைய பிரசவத்தில் இருந்து முழுமையாக மீள்வதற்குள் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிப்பது தாய் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என்றும் அப்பெண்ணிடம் டாக்டர் எச்சரித்தார்.
இந்த செய்தி சமூக ஊடகத்தில் வெளியானவுடன் உடனே வைரலானது. பல பயனர்கள் பெண்ணின் நிலை குறித்து கவலை தெரிவித்தனர். மேலும் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்க பெண்கள் மீது செலுத்தப்படும் சமூக நெருக்கடியை விமர்சித்தனர். பல பயனர்கள் கருத்தடை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, ஆரம்பகால திருமணம், குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு இல்லாதது போன்ற பிரச்னைகளைச் சுட்டிக்காட்டினர்.
குழந்தை பிறப்பில் உ.பி இரண்டாவது இடம்
இந்திய அளவில் குழந்தைகள் பிறப்பதில் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் பீகாரும், மூன்றாவது இடத்தில் மத்திய பிரதேசமும் இருக்கிறது. இது தொடர்பாக சமீபத்தில் வெளியான 2024 இன் மாதிரி பதிவு அமைப்பு (SRS) அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR), அல்லது ஒரு பெண்ணின் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை, 2.1 இல் இருந்து 1.9 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் 2.9 சதவீதத்தில் இருந்து 2.2 சதவீதம் வரை இருக்கிறது. அதேசமயம் மிகவும் குறைவாக குழந்தை பிறக்கும் மாநிலத்தில் டெல்லி (1.2) முதலிடத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் குழந்தைகள் குறைவு
கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. 0-14 வயதுடைய குழந்தைகள் மொத்த மக்கள் தொகையில் பீகாரில் 31.5 சதவீதம் இருக்கிறது. ஆனால் அது தமிழ்நாட்டில் வெறும் 18 சதவீதம்தான் இருக்கிறது.

















