’தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதா?’ – செங்கோட...
எவரெஸ்ட்டில் நடந்த அதிசயம்; இறந்துவிட்டார் என நினைத்த வழிகாட்டி 6 நாள்களுக்குப் பின் வந்தார்!
உறைபனி, மிகக் குறைந்த ஆக்சிஜன் அளவு கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் ஆபத்தான பகுதியில், 6 நாள்கள் தனியாகப் போராடி, உயிருடன் மீண்டிருக்கிறார் ஒரு நேபாள மலையேற்ற வழிகாட்டி.
எவரெஸ்ட் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத ஒரு பெரும் அதிசய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. மீட்கப்பட்டவரின் பெயர் தவா ஷெர்பா (Dawa Sherpa). இவருக்கு வயது 52.
புகழ்பெற்ற மலையேற்ற வீரர் எட்மண்ட் ஹிலாரியின் நினைவாக இவரை ஹிலாரி தவா என்றும் அழைப்பார்கள்.

மே 2026-ல், எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்துவிட்டு, மலையிலிருந்து கீழே இறங்கும்போது, சுமார் 7,500 மீட்டர் (24,600 அடி) உயரத்தில் உள்ள 'கேம்ப் 3' பகுதிக்கு அருகில் அவர் திடீரென காணாமல் போனார்.
எவரெஸ்ட் மலையில் 8,000 மீட்டருக்கு மேல் உள்ள பகுதியை 'மரண மண்டலம்' (Death Zone) என்பார்கள். தவா ஷெர்பா காணாமல் போன 7,500 மீட்டர் பகுதியும் அதற்கு இணையான கடுமையான குளிர், மிகக் குறைந்த ஆக்சிஜன் கொண்ட பகுதியாகும்.
அவர் காணாமல் போய் 5 நாள்கள் கடந்ததால், கடுமையான குளிரிலும் உணவு, ஆக்சிஜன் இல்லாமலும் அவர் இறந்திருப்பார் என்றே அனைவரும் கருதினர். அவரது மனைவி காத்மாண்டுவில் அவருக்கு இறுதிச்சடங்கு வழிபாடுகளையும் செய்யத் தொடங்கிவிட்டார்.
அவருடன் பயணித்த பிரிட்டிஷ் ராயல் மரைன் முன்னாள் வீரரான கிறிஸ் த்ரால் என்பவர், தவா ஷெர்பா இறந்துவிட்டார் என நினைத்து சமூக வலைத்தளத்தில் உருக்கமாக இரங்கல் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

Dawa Sherpa வியாழக்கிழமை அன்று, எவரெஸ்ட் மலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தூய்மைக் குழுவினர், பனிப்பாறைகளுக்கு இடையே ஒரு மனிதர் மெதுவாகத் தவழ்ந்து கீழே இறங்கி வருவதைப் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோதுதான், அது தவா ஷெர்பா என்பது தெரியவந்தது!
``எவரெஸ்ட் வரலாற்றில் இவ்வளவு உயரத்தில், எந்தவிதத் துணையும் இல்லாமல் 6 நாள்கள் தனியாகப் போராடி, உயிரைக் காத்துக் கொண்டு, அவராகவே தவழ்ந்து கீழே இறங்கி வந்ததை இதுவரை யாரும் கேள்விப்பட்டதில்லை. இது முற்றிலும் ஒரு அற்புதம்!" என்று அவரைத் தேடும் பணியை ஒருங்கிணைத்த '8K Expeditions' நிறுவனத்தின் இயக்குநர் பெம்பா ஷெர்பா தெரிவித்துள்ளார்.
எப்படி உயிர் பிழைத்தார்?
தவா ஷெர்பா பல வருட அனுபவம் வாய்ந்த ஒரு தேர்ந்த மலையேற்ற வழிகாட்டி. மலையில் ஆங்காங்கே மலையேறுபவர்கள் தங்கிவிட்டுச் சென்ற காலியான கூடாரங்களை அவர் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த உறைபனிக் காற்றிலிருந்து தப்பிக்கக் கூடாரங்களுக்குள் தங்கித் தன் உடலின் வெப்பநிலையை அவர் தக்க வைத்துள்ளார்.
பனியால் அவரது கைகள் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் தன் நம்பிக்கையைக் கைவிடாமல் பேஸ் கேம்ப் நோக்கித் தவழ்ந்தபடியே முன்னேறியுள்ளார்.
மீட்கப்பட்டவுடன் தவா ஷெர்பா ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தற்போது நினைவுடன் இருப்பதாகவும், பேசுவதாகவும், ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது மகள், "அப்பா எங்களை அடையாளம் கண்டுகொண்டார், பேசுகிறார். நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு எவரெஸ்ட் மலையேற்ற சீசனில் 1,000-க்கும் மேற்பட்டோர் சிகரத்தைத் தொட்டு சாதனை படைத்திருந்தாலும், 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தகைய ஆபத்தான சூழலில், இயற்கையின் உச்சக்கட்ட சீற்றத்தை எதிர்த்து, 6 நாள்கள் மரணத்தோடு போராடி வென்று வந்த தவா ஷெர்பாவின் இந்த 'சுய மீட்பு' கதை மனித மனஉறுதியின் ஆகச்சிறந்த சான்றாக உலகளவில் பேசப்பட்டு வருகிறது.





















