பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் ...
கழுகார் : டெல்லி அசைன்மென்ட்; கன்ஃபியூஸ் ஆன நயினார் டு டெல்லி வழி சிபாரிசு; கடம்பூர் ராஜூ டென்ஷன்!
2026 சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க - பா.ஜ.க இணைந்து சந்திக்க ஏற்பாடாகிவருகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு குறித்து இரு தரப்புக்குமிடையே இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. ஆனால், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கான தொகுதிகளில் வேலைகளைத் தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றிபெற்ற கோவில்பட்டி தொகுதியை அவருக்குக்கென ஒதுக்கிவிட்டது அ.தி.மு.க மேலிடம். அவரும் தொகுதிக்குள் வேலையை ஆரம்பித்துவிட்டார். ஆனாலும், 'அந்தத் தொகுதி எனக்கு வேண்டும். நீங்கள்தான் சிபாரிசு செய்து பெற்றுத்தர வேண்டும்' என்று ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணிடம் சிபாரிசு கேட்டிருக்கிறாராம், பா.ஜ.க-வில் சமீபத்தில் இணைந்திருக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இது கடம்பூர் ராஜூவை ஏகத்துக்கும் டென்ஷனாக்கியிருக்கிறதாம்.

அதேபோல, தி.நகர் தொகுதி சத்யாவுக்குத்தான் என்பது அ.தி.மு.க-வில் ஏறக்குறைய முடிவாகிவிட்டது. ஆனாலும், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ரூட்டில், அந்தத் தொகுதியைக் கேட்கிறாராம் பா.ஜ.க-வின் வினோஜ் பி.செல்வம். இப்படி, ஆளாளுக்கு சிபாரிசுப் பத்திரங்களுடன் படையெடுக்க ஆரம்பித்திருப்பதால், அ.தி.மு.க-வுக்குள் அனல் பறக்கிறது!
தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்ட பிறகு, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
ஆனால் மு.பெ.சாமிநாதனோ, வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியத்தின் தலைவரான கார்த்திகேய சிவசேனாபதியின் வீட்டுக்கே சென்று சந்தித்திருக்கிறார். 'உங்கள் இருவருக்கும் இடையே நடந்துவரும் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்' என்று தலைமை அறிவுறுத்தியதன் பேரில்தான் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இறங்கி வந்து, சேனாபதி வீட்டுக்குச் சென்றிருக்கிறாராம். ஆனால், " 'காங்கேயம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு அமைச்சருக்குக் காரியம் ஆக வேண்டியிருக்கிறது.
அதனால்தான் இறங்கி வருகிறார்...' என்று அவரின் ஆதரவாளர்கள் திரித்துவிடுகிறார்கள். அதை உண்மையென நம்பி, சேனாபதியும் சமாதானம் ஆகாமல் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்" என்கிறார்கள் சாமிநாதனின் ஆதரவாளர்கள்!
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா தலைமையில், வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்திருக்கிறது. அதில் பங்கேற்ற நயினாருக்கு, பீகார் மாநிலத் தேர்தலில் பா.ஜ.க கையாண்ட வியூகங்கள் குறித்து கிளாஸ் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, தி.மு.க-வின் வாக்குவங்கியை உடைப்பதற்கான வியூகங்களை அமைத்து, அதைச் செயல்படுத்த நயினாருக்குச் சில அசைன்மென்ட்டுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றனவாம். மீட்டிங்கில் எல்லாவற்றுக்கும் `ஓ.கே.., ஓ.கே...’ என்று நயினார் தலையாட்டினாலும், உண்மையில் அவருக்கு எதுவுமே புரியவில்லையாம்.
மீட்டிங்கில் பங்கேற்ற முக்கியமான சிலரைத் தொடர்புகொண்டு பேசப்பட்ட விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார். "எவ்வளவு முக்கியமான விஷயம் பேசப்பட்டிருக்கிறது... இப்படி கன்ஃபியூஸ் ஆகி நிற்கிறாரே..?" என்று நொந்துகொள்கிறார்கள் அவருக்கு விவரம் சொன்ன புள்ளிகள்!
தலைநகரின் 'விரு'விறுப்பான தொகுதியில், வணிகப்புள்ளியின் வாரிசுதான் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தேர்தல் சமயத்தில் வாங்கிய கடன், இடையிடையே வாங்கிய கடன் என்று எதையுமே திருப்பிக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்துவருகிறாராம் எம்.எல்.ஏ. அதனால் கடன் கொடுத்தவர்கள், செழிப்பான வணிகப்புள்ளியைச் சந்தித்து விவரத்தைச் சொல்லியிருக்கிறார்கள். 'எனக்கும் என் மகனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அவனை நம்பி நீங்க ஏன் பணம் கொடுத்தீங்க...' என வந்தவர்களையும் மகனையும் வசைபாடியதோடு, 'அவன் வாங்கிய கடனைக் கேட்டு இனிமே என்னிடம் வராதீர்கள்' என்றும் சூடானாராம். விஷயத்தைக் கேள்விப்பட்ட எம்.எல்.ஏ., 'பணத்தைக் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க... அதை விட்டுட்டு என்னை வசைபாடும் வேலையெல்லாம் வேண்டாம்' என்று வணிகப்புள்ளியைத் திட்டித் தீர்த்திருக்கிறார்.
'அப்பாவை நம்பித்தானே மகனுக்குப் பணம் கொடுத்தோம். திடீர்னு இவங்க பிரிஞ்சா நாம என்ன பண்றது... திருப்பிக் கேட்டா இப்படி அடிச்சுக்கிறாங்களே... கொடுத்த பணத்தை எப்படி வாங்கப்போறோம்னே தெரியலையே...' என்று புலம்புகிறார்கள் பணத்தைக் கொடுத்தவர்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அதற்குள் முக்கியமான டெண்டர்களையெல்லாம் முடித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டிவருகிறார்களாம் அமைச்சர்கள். அந்த வகையில், ஊரக உள்ளாட்சி, நகராட்சி, வீட்டு வசதி வாரியம், உணவு பாதுகாப்புத்துறை போன்ற முக்கியமான துறைகளில் 'டெண்டர் மேளா'வை அன்-அஃபீஷியலாக அறிவித்திருக்கிறார்களாம் அதிகாரிகள். அதாவது, ஒரு டெண்டரில் 'பேசவேண்டிய விகித விவகாரங்களை' பேசி இறுதி செய்வதற்கு, குறைந்தது மூன்று மாதங்கள் ஆகிவிடும்.
ஆனால், இப்போது அந்த அளவுக்கு நேரமில்லை என்பதால், நிறுவனங்கள் சொல்லும் 'விகிதங்களுக்கு' ஓ.கே சொல்லி, டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டுவருகின்றனவாம். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் மட்டும் ஒவ்வொரு துறையிலும் சுமார் 20 பெரிய டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டிருக்கின்றனவாம்!















