ஜொலிக்கும் மெட்ராஸ் சட்டக் கல்லூரி : புதுப்பொலிவுடன் 126 ஆண்டுகள் பழமையான பாரம்ப...
படத் திருட்டு மோசடி: பிரபல இணையதள மூளையாக செயல்பட்டவர் கைது - பாராட்டும் பவன் கல்யாண்!
திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத் துறையினருக்கும் பெரும் சிக்கலாக இருந்தது திரைப்படத் திருட்டு (Piracy).
திரைப்படம் திரையரங்குக்கு வந்த உடனே, அதை இணையதளத்தில் பதிவேற்றுவதால், திரைத் துறையினருக்கு ஆயிரகணக்கான கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அதைத் தொடர்ந்து திரைப்படத் திருட்டில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து திரைத் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், தெலுங்கு திரையுலகை அச்சத்தில் ஆழ்த்தி வந்த ஐபோமா (iBomma) மற்றும் பாப்பம் (Bappam) என்ற இணையதளம் வழியே தெலுங்கு திரைப்படங்களை பதிவேற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த இணையதளத்துக்கு 65-க்கும் மேற்பட்ட "போலி இணையதளங்கள் (Mirror Websites) இருந்தது. ஒரு இணையதளம் முடக்கப்படும்போது, அதே உள்ளடக்கத்துடன் மற்றொரு "மிரர் சைட்" உடனே செயல்படத் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த திரைப்படத் திருட்டுக்கு மூளையாகச் செயல்பட்ட ரவி எமாண்டி (39) என்பவரை தெலங்கானா காவல்துறை கைது செய்திருக்கிறது.
இது தொடர்பாக ஹைதராபாத் நகர காவல்துறை ஆணையர் வி.சி. சஜ்ஜனார், ``தெலங்கானாவில், ஐபோமா மற்றும் பாப்பம் என்ற பெயரில் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட நபரை ஹைதராபாத் சைபர் கிரைம் பிரிவு கைது செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் லட்சக்கணக்கான பயனர்களை சட்டவிரோத பந்தய தளங்களுக்குத் திசை திருப்பி, பெரிய அளவிலான நிதி மோசடி மற்றும் தரவு திருட்டும் செய்திருக்கின்றனர்.

இந்த வழக்கில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவரும், தற்போது கரீபியன் குடிமகனுமான ரவி எமாண்டி என்பவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இவரின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். ரவி எமாண்டி திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பு, ஹைதராபாத்தில் ஒரு வலை சேவை நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார்.
2019-ம் ஆண்டு கொரோனாவின் போது iBomma ஐத் தொடங்கினார். இந்த வலைத்தளத்தில் மாதத்திற்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் பயனர்கள் வந்து செல்கின்றனர்.
பல மொழிகளில் கிட்டத்தட்ட 21,000 திரைப்படங்களைக் கொண்ட ஹார்டு டிரைவ்களை பறிமுதல் செய்திருக்கிறோம். திரைப்பட திருட்டு, ஆன்லைன் மோசடி மற்றும் தரவு திருட்டு தொடர்பான நான்கு வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பதிவு செய்திருக்கிறோம்." என்றார்.
இந்த வழக்கில் தெலங்கானா காவல்துறையின் சீரிய செயல்பாட்டுக்கு ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,``ஐபோம்மா மற்றும் பப்பம் வலைத்தளங்களை மூடக்கியதற்கும், இந்த வலைத்தளங்களை நடத்துபவர்களைக் கைது செய்ததற்கும் ஹைதராபாத் காவல்துறையினருக்கு என் பாராட்டுகள்.

புதிய படம் வெளியாகும் போதெல்லாம், ஐபோம்மா மற்றும் பப்பம் நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் கும்பல் முதல் நாளிலேயே இந்தப் படங்களின் நகலை இணையத்தில் பதிவேற்ற முடிந்தது. இதன் விளைவாக திரைப்படத் துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
இதுபோன்ற சினிமா திருட்டுத்தனத்தால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டனார். ஹைதராபாத் காவல்துறையின் சைபர் கிரைம் குழு திருட்டு கும்பலைக் கைது செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறது.
பந்தய மாஃபியாக்கள் மற்றும் குடும்பங்களை அழிக்கும் போன்ஸி திட்டங்களை நடத்துபவர்கள் மீதும் உன்னிப்பாகக் கவனித்து, கண்காணித்ததற்கும் காவல்துறைக்கு நன்றி. இந்த நடவடிக்கை தெலுங்கு திரையுலகிற்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள சினிமா துறைக்கே பயனளிக்கும்" என்றார்.
















