`இந்திய வீடுகளில் உறங்கும் 35,000 டன் தங்கம்' - மோடி சொல்லும் `மறுசுழற்சி'; மாறு...
கேரளம்: திருமணம் மீறிய உறவால் குழந்தை கொலை; நடனப் பெண், டிரைவர் பின்னணி குறித்த அதிர்ச்சித் தகவல்
கேரள மாநிலம் நெடுமங்காடு பனவூரில் வாடகை வீட்டில் வசித்துவந்தார் அகிலா. நடன மங்கையான அகிலா நடனக்குழுவுடன் கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதற்குச் செல்வது வழக்கம்.
அகிலா மூன்று மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது அவரது கணவர் அகில் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் தனது ஒன்றரை வயது மகன் அர்ஷித் உடன் வசித்துவந்தார். இதற்கிடையே, நடனக்குழுவினர் செல்லும் வாகனத்துக்கு டிரைவராகப் பணியில் சேர்ந்த அஸ்கர் என்பவருடன் அகிலாவுக்கு நட்பு ஏற்பட்டது.
இருவரும் கணவன், மனைவி போன்று ஒரே வீட்டில் வசித்து வந்தனர். காதலுக்கு இடைஞ்சலாக இருப்பதால் ஒன்றரை வயது குழந்தையை அகிலாவும், அஸ்கரும் சேர்ந்து கொடுமைபடுத்தி வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அகிலா தமிழ்நாட்டில் ஒரு நடன நிகழ்ச்சிக்குச் சென்றபோது அஸ்கர் குழந்தையின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்துள்ளார்.
பின்னர், சாதம் ஊட்டியபோது குழந்தை வாந்தி எடுத்ததாகவும், அதைத்தொடர்ந்து மயங்கியதாகவும் அப்பகுதியினரிடம் நாடகம் ஆடினார். உடனே குழந்தை அர்ஷித்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பின்னர் பிரேதப் பரிசோதனை செய்ததில் குழந்தையின் உடலில் மொத்தம் 91 காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டன. அதில் சுமார் 56 வெளிப்புறக் காயங்களும், மீதமுள்ளவை உட்காயங்களாகும்.
இந்தக் காயங்கள் அனைத்தும் கடந்த ஒரு மாத காலத்திற்குள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகளால் ஏற்பட்டவை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு குழந்தையின் இரு கைகளும் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்றுள்ளான். அப்போது சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டதாக அகிலா தெரிவித்திருந்தார். ஆனால் குழந்தையை அடித்து துன்புறுத்தியதால் கைகள் உடைந்ததாகக் கூறப்படுகிறது.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து அகிலா மற்றும் அஸ்கரைக் கைது செய்தனர். குழந்தை தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்ததால் தலையை சுவற்றில் மோதச்செய்து கொலை செய்ததாக அஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு அஸ்கருடன் சேர்ந்து தாய் அகிலாவும் குழந்தையைச் சித்திரவதை செய்துள்ளார். மேலும், போலீஸ் விசாரணையில் அஸ்கர் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், "பனவூரில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த அஸ்கர், பாலோடு பகுதியைச் சேர்ந்த ஆமினா என்ற பெண்ணை முகநூல் மூலம் காதலித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார்.
முதலில், ஆமினாவின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அப்போதுதான் அஸ்கரின் மோசமான பின்புலத்தை அறிந்து திருமண நடவடிக்கைகளை நிறுத்தினர்.

இதற்கிடையே ஆமினாவை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டார் அஸ்கர். அதன்பின்னர் அஸ்கரின் உண்மை முகம் வெளிப்பட்டது. வரதட்சணை கேட்டு ஆமினாவைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்தார்.
அஸ்கரின் கொடூரமான தாக்குதல் காரணமாக ஆமினா கோமா நிலைக்குச் சென்றார். அவருக்கு நினைவு திரும்பிய போதிலும், பேசும் திறனை இழந்து, மருத்துவக் கல்லூரி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதுபோன்று மற்றொரு நடனக் குழுவிற்காக வாகன ஓட்டுநராகச் சென்ற அவர் பல பெண்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு பணம் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும், முதல் மனைவி ஆமினாவின் சகோதரன் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்ததில் அஸ்கருக்குப் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்" என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, அஸ்கருடன் ஏற்கனவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த, சிறையின்கீழு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திலும் அஸ்கரின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அஸ்கரின் பெற்றோர், அகிலாவின் பெற்றோர் மற்றும் அஸ்கரின் முதல் மனைவி ஆமினாவையும் அமைச்சர் பிந்து கிருஷ்ணா சந்தித்தார். மேலும், அஸ்கருக்கு எதிராக எழும் அனைத்து புகார்களையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அமைச்சர் பிந்து கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.



















