மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொ...
கோவை: கடத்தப்பட்ட இளைஞர்கள்; ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த காவலர்கள் - அதிர்ச்சி சம்பவம்
கோவை மாவட்டம், போத்தனூரை அடுத்த சித்தண்ணபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் நவீன் (29). இவர் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் தங்கியிருந்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மதியம், நவீனின் அக்கா பரமேஸ்வரியின் செல்போனுக்கு வந்த அழைப்பில் பேசிய அடையாளம் தெரியாத ஒரு நபர், “உன் தம்பி நவீனைக் கடத்தி வைத்துள்ளோம். அவர் உயிரோடு வேண்டுமென்றால் உடனடியாக ரூ.50 லட்சம் தர வேண்டும்” எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி, நவீனின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, நவீனின் நண்பரான நிர்மல்குமார் (29) என்பவரின் மனைவி ஜெனிதாவும், தன் கணவரைக் காணவில்லை என்று பரமேஸ்வரியைத் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். தொடர்ந்து அன்றிரவே, நவீனின் செல்போன் எண்ணில் இருந்து ஜெனிதாவிற்கு வந்த அழைப்பில், இருவரையும் கடத்தியதை ஒப்புக்கொண்ட கும்பல், பணம் தராவிட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளது. இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் கடத்தல்காரர்கள் பேசிய செல்போன் எண்களைக் கொண்டு போலீஸார் துப்புத் துலக்கினர்.
இதற்கிடையே, கடத்தல்காரர்களின் திட்டப்படியே பணத்தைத் தயார் செய்தது போல் காட்டி, நவீன் மற்றும் நிர்மல்குமாரின் குடும்பத்தினரை திருப்பூர் செல்ல போலீஸார் அறிவுறுத்தினர். போலீஸாரும் சாதாரண உடையில் அவர்களைப் பின்தொடர்ந்தனர். திருப்பூரில் பணத்தைப் பெற வந்த இருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் காவலர்களாகப் பணிபுரிந்து வரும் மோகன் (37) மற்றும் ஆனந்த் (38) என்பது தெரியவந்தது.
கைதான காவலர்கள் கொடுத்த தகவலின்படி, திருப்பூரில் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நவீன் மற்றும் நிர்மல்குமாரை போலீஸார் பத்திரமாக மீட்டனர். மேலும் அங்கிருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த காளிதாஸ் (31), ராம்குமார் (31) ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடத்தப்பட்ட நவீன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் பல்வேறு ஆன்லைன் வேலைகளுடன் சேர்த்து, தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததும், இதில் ஏற்பட்ட மோசடி மற்றும் பணத் தகராறே கடத்தலுக்குக் காரணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக மீட்கப்பட்ட நவீன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

















