"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப...
சேறும் சகதியுமான சாலை: ``மழைக்காலத்தில் அப்படித்தான் இருக்கும்'' - மக்களிடம் எகிறிய ஊராட்சி செயலர்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்குடி பாரத்நகர், சக்திநகர் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால் இங்கு பல ஆண்டுகளாக தார்சாலை, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் தவித்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
தங்கள் படும் அல்லல்களை தீர்க்க பலமுறை மனுக்கள் அளித்தும் ஆட்சியில் உள்ளவர்களும், அதிகாரிகளும் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
மேலும், மழைக்காலங்களில் மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நிற்பதால் சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. சேறும் சகதியும் ஆக மாறிவிடுகிறது.
இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலையைப் பயன்படுத்த முடியாத அவல நிலை நிலவி வருகிறது.
இங்குள்ள மாணவர்கள் அந்தச் சாலையைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
அதேபோல், அங்கு தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பிவருவதாகவும், இரவு நேரங்களில் விஷஜந்துக்கள் ஆன பாம்பு, தேள், நட்டுவாக்கிளி போன்றவை குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் பொதுமக்கள் புலம்பினர்.

இதனால் உயிர்ப் பயத்துடன் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதோடு, குடியிருப்பு பகுதிகளில் அலையும் பன்றிகள், நாய்கள் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே நடந்து செல்ல அச்சுறுத்தல் நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில், ஊராட்சி செயலர் சண்முகம் பார்வையிட வந்தபோது அப்பகுதி மக்கள் அவரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “உங்களது கோரிக்கைகளை மேலதிகாரிகளுக்கு தெரிவிப்பேன். சம்பந்தமில்லாமல் என்னிடம் கேள்வி கேட்கக்கூடாது. மழைக்காலங்களில் சாலைகள் 10 நாட்களுக்கு சேறும் சகதியுமாகத்தான் இருக்கும். என்னிடம் யாரும் விவாதம் செய்ய வேண்டாம்” என கூறினார்.
ஒரு கட்டத்தில் அங்குள்ள பெண்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் பதில் அளிக்க முடியாமல் ஊராட்சி செயலர் அப்பகுதியை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள், “எங்கள் பகுதியை பார்வையிட வந்து இப்படி பாதியில் சென்றால் என்ன அர்த்தம்? எங்கள் பிரச்னைக்கு என்ன தீர்வு?” என்று கோபமாக கேட்டனர். இதனை பொருட்படுத்தாமல் ஊராட்சி செயலர் சண்முகம் அங்கிருந்து சென்று விட்டார்.
இது தொடர்பான வீடியோ காட்சி அப்பகுதியில் உள்ள வாட்ஸ்அப் தளங்களில் வைரலானது.

இந்நிலையில், தங்கள் பகுதியில் நிலவும் அவல நிலைக்கு அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நட்டு தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தொடர்ச்சியாக பல போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும், இது இப்படியே தொடர்ந்தால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.
சாலை சேறும் சகதியுமாக இருப்பதை சரிசெய்யாத அதிகாரிகளை கண்டித்து மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















