இரண்டு சம்பளம் வாங்கும் கணவன் மனைவியா? ₹1 கோடி ஈஸியா சேர்க்கும் வழி இதுதான்!
தரையில் அமரும் பயணிகள்; மூக்கை பிடிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடு- பெரம்பலூர் பேருந்து நிலைய அவலம்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாணவர்கள், பணிக்குச் செல்வோர், ஊர்களுக்குச் செல்வோர் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்தப் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு போதுமான இருக்கைகள், குடிநீர், அவசரத்துக்கு கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது, பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அனைவரும் குப்பைகள் நிறைந்த நடைமேடையில் அமர்ந்தும், நின்றுகொண்டும் காத்திருக்க வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் தரையில் அமர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

குப்பைகள் நிறைந்து காணப்படுவதால், பயணிகள் முகம் சுளித்தபடியே பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டி இருக்கிறது. போதிய குடிநீர் வசதியும் இல்லாததால் மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இங்குள்ள ஒரே இலவச கழிப்பறையும் முறையாகப் பராமரிக்கப்படாமல், தண்ணீர் வசதியின்றி, கழிவுநீர் தரையில் வழிந்தோடும் நிலையில் உள்ளது. ஆண்கள் கழிப்பறையில் சில பகுதிகள் மூடப்பட்டும், தண்ணீர் இல்லாமலும், துர்நாற்றத்துடனும் காணப்படுகின்றன.

முறையாகப் பராமரிக்கப்படாத குப்பைத் தொட்டிகளும், அமருவதற்கு இடமின்மையும் பயணிகளுக்குச் சிரமமாக உள்ளதோடு, இருசக்கர மற்றும் தனியார் வாகனங்கள் பேருந்து நடைமேடை வரை நிறுத்தப்படுவதும் பெரும் இடையூறாக உள்ளது. இதைத் தடுக்க காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் அறிவிப்புப் பலகைகள் வைத்தல், நேரில் சென்று கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.














நீண்டநாள்களாக நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகளை பொதுமக்களும் பயணிகளும் வலியுறுத்துகின்றனர்.



















