`பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்' அமைக்க வேண்டும்' - ஜக்...
திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம்; 9-ம் தேதி தேரோட்டம்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விளங்கி வருகிறது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா, ஆவணித் திருவிழா, கந்தசஷ்டி, தைப்பூசம் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
அதே போல் இந்தாண்டுக்கான ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டது.

1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 5.15 மணிக்குக் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மாப்பொடி உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

5-ம் நாள் திருவிழாவான வரும் செப்டம்பர் 4-ம் தேதி இரவு 7:30 மணிக்கு மேலக் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று, சுவாமி - அம்பாள், தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது. 7ம் நாள் திருவிழாவான வரும் செப்டம்பர் 6-ம் தேதி சுவாமி 5 மணிக்கு உருகு சட்டசேவை நடைபெறுகிறது.
அன்று காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர், வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளளும் அன்று மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெறும்.
8-ம் நாள் விழாவான வரும் செப்டம்பர் 7-ம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து, அன்று நண்பகல் 12 மணிக்கு சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறுகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி அன்று காலை 7 மணிக்கு விழாவின் சிகர நிகழ்வான நடைபெறுகிறது. திருவிழா காலங்களில் தினமும் சுவாமி – அம்பாள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறுகிறது.





















