கடலூர்: கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டம்; அரசுக்கு அன்புமணியி...
திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை செய்து வருகிறார்.
வெண்ணிலாவுடன் அவரின் மகன்கள் சுரேஷ் (15) சூர்யா (7) தேவா ( 4) ஆகியோரும் பண்ணையிலேயே தங்கியிருந்தனர். இந்தநிலையில்தான் திருத்தணி காவல் நிலையத்துக்கு வந்த வெண்ணிலா, என்னுடைய மூத்த மகன் சுரேஷை மூன்று மாதங்களுக்கு முன்பு பண்ணை உரிமையாளர் பாலமுருகன் அடித்தே கொலை செய்து பண்ணையிலேயே புதைத்துவிட்டதாக கண்ணீர்மல்க புகார் ஒன்றைக் கொடுத்தார்.
இந்தக் கொலைக்கு பாலமுருகனின் குடும்பத்தினரும் பாலமுருகனின் நண்பர் வினோத்தும் உடந்தை என்றும் குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து திருத்தணி போலீஸார், வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு பண்ணைக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது சுரேஷை கொலை செய்து புதைத்த இடத்தையும் வெண்ணிலா போலீஸாரிடம் காண்பித்தார். சிறுவன் சுரேஷை புதைத்த இடத்தைச் சுற்றி சிமெண்ட் கற்களால் கல்லறை போன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சுரேஷின் சடலத்தை வருவாய் துறையினர் முன்னிலையில் போலீஸார் ஜே.சி.பி மூலம் தோண்டியெடுத்தனர். பின்னர் அங்கேயே பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுவன் சுரேஷை கொலை செய்து சடலத்தை பண்ணையிலேயே புதைத்த குற்றத்துக்காக பண்ணையை நடத்தி வரும் பாலமுருகன், அவரின் மனைவி புவனேஸ்வரி, பாலமுருகனின் நண்பன் வினோத் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா கூறுகையில், , ``கோழி பண்ணையில் வேலைப்பார்த்த வெண்ணிலாவுக்கு உதவியாக அவரின் மூத்த மகன் சுரேஷ் என்பவரும் இருந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக வெண்ணிலா எங்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்அடிப்படையிலேயே விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
திருத்தணி போலீஸாரிடம் விசாரித்தபோது, ``வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷை சுத்தியலால் அடித்தே பாலமுருகன், அவரின் நண்பர் வினோத் ஆகியோர் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தக் கொலைக்கு பாலமுருகனின் மனைவி புவனேஸ்வரிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால் மூன்று பேரை கைது செய்திருக்கிறோம். சிறுவன் சுரேஷ் கொலை செய்யப்பட்ட தகவலை ஏன் இவ்வளவு நாள் அவரின் அம்மா வெண்ணிலா மறைத்தார் என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.

பாலமுருகன், வினோத் ஆகியோரின் பின்னணி குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸார் கூறுகையில், ``பாலமுருகனும் வினோத்தும் நண்பர்கள். பாலமுருகனின் பண்ணையில் கோழிகளை பராமரிக்கும் வேலைக்கு தன்னுடைய சித்தி வெண்ணிலாவை வினோத் அழைத்து வந்திருக்கிறார். பண்ணையில் வேலைக்கு வருவதற்கு முன்பு ரயிலில் வியாபராம் செய்து குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார் வெண்ணிலா. சரிவர ஆடுகளை மேய்க்காததால் பக்கத்து இடத்துக்கு ஆடுகள் சென்றது தொடர்பாக வெண்ணிலாவின் மகன் சுரேசிடம் விசாரித்திருக்கிறார் பாலமுருகன். அப்போதுதான் அங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆத்திரமடைந்து சுரேஷை தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கிறார். ஆனால் அந்தத் தகவலை முழுமையாக வெண்ணிலாவிடம் தெரிவிக்காமல் உன் மகன் இறந்துவிட்டான். அவன் இடத்தில் நான் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என தன்னுடைய சித்தியிடம் வினோத் கூறி சமரசப்படுத்தியிருக்கிறார்'' என்றனர்.
சிறுவனின் அம்மா வெண்ணிலா கூறுகையில், ``என்னுடைய மகனை பிப்ரவரி மாதமே கொலை செய்து பண்ணையிலேயே புதைத்து விட்டார்கள். இந்தத் தகவலை வெளியில் சொல்லக்கூடாது என என்னையும் என்னுடைய மற்ற இரண்டு குழந்தைகளையும் மிரட்டி வைத்திருந்தார்கள். அவர்களின் பிடியிலிருந்து தப்பி வந்து இப்போதுதான் உண்மையை என்னால் சொல்ல முடிந்தது" என்று கண்ணீர்மல்க கூறினார்.
வெண்ணிலாவிடம் உங்களையும் குழந்தைகளையும் அறைக்குள் அடைத்து சித்ரவதை செய்தார்களா என்று கேட்டபோது அவர் பதற்றத்துடன் காணப்பட்டார். மேலும் அதுதொடர்பாக அவரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. அதனால், வெண்ணிலாவிடம் முழுமையாக விசாரித்தால் இன்னும் பல தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர்.




















