கி.மீ-க்கு ரூ.8, AI கண்காணிப்பு கேமரா.. 7 சீட்டரில் அட்டகாசமான சொகுசு டாக்ஸி - ட...
`தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடாதீர்கள்' - அனுபம் கெர் பகிர்ந்த விமான சம்பவம்!
முன்பின் பழக்கமில்லாத ஒருவரை பார்க்கும்போது அவரது தோற்றத்தை வைத்தே அவரைப் பற்றி நம்மில் பலர் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். அவர் இப்படித்தான், அவருடைய குணம் இதுதான் என நாமாகவே ஒரு கதையை உருவாக்கி விடுகிறோம். ஆனால், அந்தத் தோற்றத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன, அவர்களின் வலி என்ன என்பது பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அப்படி ஒரு நெகிழ்ச்சியான வாழ்க்கைப் பாடத்தை, நடிகர் அனுபம் கெர் ஒரு விமானப் பயணத்தின் போது கற்றுக்கொண்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கோவாவில் இருந்து மும்பைக்குச் செல்லும் ஒரு விமானம். நடிகர் அனுபம் கெர் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது டேவிட் என்ற நபர் விமானத்தில் ஏறினார். அவர் உடல் எடை சற்று அதிகமாக இருந்ததால், விமானத்தில் இருந்த பலரது கண்களும் அவரை விசித்திரமாகப் பார்த்தன. அனுபம் கெர் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிர்ப்புறம் டேவிட் அமர்ந்தார்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, டேவிட் தனது பையைத் திறந்தார். அதிலிருந்து ஏராளமான சாக்லேட்டுகளையும், இனிப்புகளையும் வெளியே எடுத்தார். பின்னர், அவற்றை அப்படியே இருக்கையில் வைத்துவிட்டு கழிவறைக்குச் சென்றார்.
THANK YOU DAVID FOR THE LESSON! ❤️
— Anupam Kher (@AnupamPKher) June 11, 2026
Life is full of lessons. Last week, on a flight from Goa to Mumbai, I learned one.
In the picture is David.
When David boarded the flight, many people looked at him because he was overweight. He came and sat across the aisle from me. In the… pic.twitter.com/Yw7rjm4qcu
இதைப் பார்த்த அனுபம் கெர், தன் பக்கத்தில் அமர்ந்திருந்த நபரிடம் அக்கறையாகவும் அதே சமயம் சற்று விமர்சனத்துடனும், "இவர் இவ்வளவு சாக்லேட்டுகளையும், இனிப்புகளையும் சாப்பிடக் கூடாது!" என்று கூறியுள்ளார். அதற்கு அந்த நபரும் சிரித்துக்கொண்டே, "இதனால்தான் அவர் இப்படி இவ்வளவு உடல் எடையுடன் இருக்கிறார் போல!" என்று பதிலளித்தார். இருவருமே டேவிட்டைப் பற்றி எதுவுமே அறியாமல், அவர் தோற்றத்தை வைத்து அவரை எடைபோட்டனர்.
சிறிது நேரம் கழித்து டேவிட் திரும்பி வந்தார். அவர் செய்த செயல், அனுபம் கெர் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆம், டேவிட் அந்த சாக்லேட்டுகளை சாப்பிடவில்லை. மாறாக, அனைத்தையும் விமானத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் அன்பாகக் கொடுத்தார். இதைப் பார்த்த அனுபம் கெர் தன் முன்முடிவை எண்ணி தலைகுனிந்துள்ளார்.
உடனே டேவிட்டிடம் சென்று தயங்கிக் கொண்டே, "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த சாக்லேட்டுகளை எல்லாம் நீங்கள் தான் சாப்பிடப் போகிறீர்கள் என்றும், அதனால்தான் நீங்கள் அதிக உடல் எடையுடன் இருக்கிறீர்கள் என்றும் நான் தவறாக நினைத்துவிட்டேன்" என்று தனது எண்ணத்தை நேர்மையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
டேவிட் கொஞ்சம் கூட கோபப்படாமல், அன்பாகச் சிரித்துக்கொண்டே கூறினார்: "நீங்கள் அப்படி நினைத்ததில் நான் உங்களைக் குறை சொல்ல மாட்டேன்! எனக்கு ஒரு மருத்துவப் பிரச்னை உள்ளது, அதனால்தான் என் உடல் எடை இப்படி இருக்கிறது. நான் முன்பு விமான நிறுவனத்தில் தான் வேலை செய்து வந்தேன். இந்த விமானப் பணியாளர்கள் தினமும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், அவர்கள் வேலை எவ்வளவு நெருக்கடியானது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால், நான் எப்போது பயணம் செய்தாலும், அவர்களுக்கு இப்படி இனிப்புகளை வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்."
டேவிட்டின் இந்தப் பதிலைக் கேட்ட அனுபம் கெர் நெகிழ்ந்துள்ளார். ஒருவர் மீது நாம் எவ்வளவு எளிதாகக் குற்றம் சாட்டுகிறோம், அவர்களைப் பற்றி எதுவும் தெரியாமலேயே எவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வருகிறோம் என்பதை எண்ணி வருந்தியுள்ளார். டேவிட்டிடம், தனக்கொரு வாழ்க்கைப் பாடம் கிடைத்ததற்கு நன்றியைக் கூறி, அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.

`ஒரு புத்தகத்தின் அட்டையை வைத்து அதனுள்ளே இருக்கும் கதையை மதிப்பிட்டு விடக் கூடாது’ என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம். ஒருவரின் தோற்றத்தைப் பார்த்தோ, அல்லது அவர்களின் ஒரு சிறு செயலைப் பார்த்தோ அவர்களை தவறாக எடைபோடக் கூடாது. பல நேரங்களில், நாம் தவறாக நினைக்கும் நபர்கள் தான், உலகின் மிகச் சிறந்த மனிதர்களாகவும், இரக்க குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களின் வாழ்க்கைப் போராட்டமோ, மருத்துவ நிலையோ நமக்குத் தெரியாது. எனவே, முன்முடிவுகள் இல்லாமல், அனைவரிடமும் அன்போடும், புரிதலோடும் நடந்துகொள்வதே நாம் மனிதர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதை.





















