IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில்...
நெல்லை: மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தம்; வலசை பறவைகள் உயிரிழக்கும் அபாயம்!
நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து 80 அடி கால்வாய் வழியாக நாங்குநேரி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வழக்கமாக அணையில் போதிய நீர் இருப்பின், மூன்றாம் மற்றும் நான்காம் ரீச் பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், தற்போது மணிமுத்தாறு அணையில் தண்ணீர் இருப்பினும், மூன்றாம் மற்றும் நான்காம் ரீச் பகுதியில் 10 அடி கன அடி தண்ணீரே திறக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் குளிர் அதிகரிக்கும் காலகட்டத்தில், ஆண்டுதோறும் வலசை பறவைகள் நெல்லை சரணாலயம் பகுதிக்கு வந்து, ஆடி மாதத்தில் இனப்பெருக்கம் முடிந்து, குஞ்சுகளுடன் திரும்புவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாததால், கூந்தன்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வறண்டு கிடக்கின்றன. குறிப்பாக, கூந்தன்குளம், வடக்கு கழுவூர், காடாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், பல வலசை பறவைகள் சோர்வடைந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன.
இது குறித்து பேசிய விவசாயிகள், “மணிமுத்தாறு கால்வாயின் முதல் மற்றும் இரண்டாம் ரீச் பகுதிகளுக்கு இந்தாண்டு போதுமான தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் ரீச் பகுதிகளான மூலக்கரைப்பட்டி, அரசனார்குளம், தாந்தோணி, கூந்தன்குளம், வடக்கு கழுவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

ஒரு வாரத்திற்கு முதல் மற்றும் இரண்டாம் ரீச் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தி, மூன்றாம், நான்காம் ரீச் பகுதிகளில் உள்ள முக்கிய குளங்களுக்கு தண்ணீர் வழங்கினால், விவசாயமும் காப்பாற்றப்படும், பறவைகளுக்கும் தண்ணீர் கிடைக்கும்” என்றார். இது குறித்து நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம், “இது குறித்து விசாரித்து வருகிறோம். அத்துடன் அப்பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.



















