டெல்லி: இந்தாண்டின் முதல் 15 நாள்களில் 800 பேர் மாயம்; 'இது சராசரிதான்' - போலீஸ்...
பஞ்சாப்: குருத்வாரா அருகில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேராய் சுட்டுக்கொலை; பின்னணி என்ன?
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாடல் டவுனில் இருக்கும் குருத்வாராவிற்கு வெளியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேரா இன்று காலை தனது காரை நிறுத்திக்கொண்டிருந்தார்.
அந்நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் லக்கி ஒபேராய் இருந்த காரை நோக்கி சரமாரியாகச் சுட்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து லக்கி ஒபேராயை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் ஒபேராய் இறந்து போனார். மர்ம நபர்கள் லக்கி ஒபேராய் மீது 5 முறை துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். லக்கி ஒபேராய் மனைவி சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் பர்தாப் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ''முதல்வர் பகவான் மான் நிர்வாகத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. பட்டப்பகலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பது இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.
ஆளும் கட்சித் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லையெனில் சாதாரண குடிமக்களுக்கு என்ன உத்தரவாதம்? இன்று பஞ்சாப் அச்சம், கும்பல் வன்முறை மற்றும் நிர்வாக முடக்கத்தால் சூழப்பட்டுள்ளது.
அதே சமயம், ஆம் ஆத்மி அரசு இதற்குச் சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த முழுமையான சீர்குலைவுக்கு யார் பொறுப்பு என்று முதலமைச்சர் பகவந்த் மான் பதிலளிக்க வேண்டும்'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

















