இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி; தவெக-...
`பலூன், மலர்களால் ஏ.சி முதல்வகுப்பு பெட்டி அலங்காரம்' - ரயிலை தேனிலவு அறையாக மாற்றிய புதுமணத்தம்பதி
ரயில்களை எதாவது நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் அதன் முழு இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால் மகாராஷ்டிரா தம்பதியினர் சற்று வித்தியாசமாக ரயிலை தங்களது தேனிலவு அறையாக மாற்றியுள்ளனர்.
பல்ஹார்ஷா - மும்பை நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி (AC) கூபே அறை, புதுமணத் தம்பதிக்காக மலர்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட தேனிலவு அறையாக மாற்றப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த ரயிலில் உள்ள ஒரு தனி அறை முழுவதும் பலூன்கள், பூக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், அதன் சுவரில் ஐ லவ் யூ என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. ரயில் ஓடிக்கொண்டிருந்த போதே இந்த காதல்மயமான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததை அந்த வீடியோ காட்டியது.
அந்த புதுமணத் தம்பதி கடந்த 6ம் தேதி அன்று சத்ரபதி சம்பாஜிநகரிலிருந்து (முன்பு அவுரங்காபாத்) மும்பைக்குப் பயணம் செய்வதற்காக, முதல் வகுப்பு ஏசி பெட்டியில் உள்ள ஜி கூபே அறையை முன்பதிவு செய்திருந்தனர்.

ஜால்னாவைச் சேர்ந்த தம்பதியினர் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே, 'ராஹத் ரூம் டெக்கரேஷன் நிறுவன ஊழியர்கள் ஜால்னா ரயில் நிலையத்தில் வைத்து அந்த ஏசி பெட்டியை அலங்கரித்துள்ளனர். தங்களது கூபே அறையை அலங்கரிப்பதற்காக ஜால்னாவைச் சேர்ந்த ராஹத் டெக்கரேட்டர் நிறுவனத்தை ஒரு ஆன்லைன் தளம் மூலமாகத் அத்தம்பதி தன்னிச்சையாக வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
அந்த அலங்கார நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த அலங்கார வேலைகளைச் செய்வதற்காக ஜால்னா ரயில் நிலையத்தில் வைத்து, அந்த சொகுசு ஏசி பெட்டிக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். இதற்காக அவர்கள் அனுமதியின்றி ரயிலுக்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த தனியார் நிறுவனம் மீது அத்துமீறி நுழைதல் மற்றும் டிக்கெட் இன்றி பயணித்தல் ஆகிய குற்றங்களுக்காக ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்காக அன்றைய தினம் பணியில் இருந்த தலைமை பயணச்சீட்டு பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஓடும் ரயிலுக்குள் அனுமதியின்றி ஒரு தனியார் வணிக நிறுவன ஊழியரை அனுமதிப்பதும், ரயிலை மாற்றி அமைப்பதும் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை மிகக் கடுமையாக மீறும் செயலாகும் என்று ரயில்வே அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



















