ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?
பாரதிராஜா : "அப்பவும் அவனை நினைக்காமல் தூங்கினதில்லை!" - கனவை நோக்கி ஓடிய நண்பர்களின் கதை!
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று இயற்கை எய்தினார். கடந்த 5 தசாப்தங்களில் சினிமா கண்ட அத்தனை வளர்ச்சிகளுடன் பயணித்தவர் பாரதிராஜா.
பாரதிராஜாவும், இளையராஜாவும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சினிமாவுக்குள் இருவரும் வருவதற்கு முன்பிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

சினிமாவில் பணி சார்ந்த நட்பை தாண்டி இருவரும் இணக்கமாக பயணித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு இடையேயான நட்பு பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இயக்குநர் பாரதிராஜா முதலில் சுகாதாரத்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நடிப்பின் மீது பேரார்வம் கொண்டிருந்தவர் தொடர்ந்து நாடகங்களைப் போட்டிருக்கிறார். அதிலும் அவரே நடித்திருக்கிறார்.
இப்படி நாடகத்திற்காகப் பல்வேறு இடங்களுக்குப் பயணித்துக் கொண்டிருந்தவருக்கு இளையராஜாவுடன் நட்பு கிடைத்தது. இளையராஜா மற்றும் அவருடைய சகோதரர்கள் பாஸ்கர், கங்கை அமரன் என அனைவரும் சினிமா கனவை நோக்கித்தான் ஒன்றாகச் சுற்றி வந்தார்களாம்.
சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு பாரதிராஜா இயக்கிய நாடகங்களுக்கு இளையராஜாவே இசையமைத்திருக்கிறார். இதன் பிறகு, சுகாதாரத்துறை பணியை விட்டுவிட்டு மெட்ராஸூக்கு வந்தார் இயக்குநர் பாரதிராஜா.
ஒரு பக்கம் நடிப்பிற்கான முயற்சிகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டே, ஒரு பெட்ரோல் பங்கிலும் வேலை பார்த்து வந்திருக்கிறார். இதன் பிறகு அண்ணன் தம்பியோடு மெட்ராஸுக்கு வந்த இளையராஜா, பாரதிராஜாவுடன் அவருடைய அறையிலேயே தங்கினார்.

இதற்கிடையில் இளையராஜா, இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷிடம் கிடார் வாசிப்பாளராகச் சேர்ந்திருக்கிறார். ஒரு நாள் எதேச்சையாக, கன்னட மொழியில் 'பெல்லி மோடா' என்கிற படத்தைப் பார்த்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.
அந்தப் படத்தினால் ஈர்க்கப்பட்டவர், உதவி இயக்குநராகச் சேர்ந்தால் புட்டண்ண கனகலிடம் (பெல்லி மோடா படத்தின் இயக்குநர்)தான் சேர வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். இந்த ஆசையை இளையராஜாவிடமும் சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.
பிறகு, இளையராஜா, இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷிடம் பாரதிராஜாவின் விருப்பத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். பிறகு, வெங்கடேஷ், பாரதிராஜாவை இயக்குநர் புட்டண்ண கனகலிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
1976-ல் இளையராஜா 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதற்கடுத்த ஆண்டில், பாரதிராஜா '16 வயதினிலே' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு தன் நண்பனையே பாரதிராஜா இசையமைக்க வைத்தார்.

அந்தப் படத்தில் தொடங்கிய இவர்களுடைய சினிமா கூட்டணி, 1992-ம் ஆண்டு வெளியான 'நாடோடி தென்றல்' திரைப்படம் வரை தொடர்ந்தது. இத்தனை ஆண்டுகள் பயணித்த இந்தக் கூட்டணி தமிழ் ரசிகர்களுக்கு ஹிட் பாடல்களைக் கொடுக்கவும் தவறியதில்லை.
சொல்லப்போனால், இளையராஜா இசைக்கெனவே தனியாக காட்சிகளை எழுதியதாக பாரதிராஜா சொல்லியிருக்கிறார். இதன் பிறகு இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில காலம் இவர்கள் சேர்ந்து பணியாற்றாமல் இருந்தனர்.
அப்படியான சமயத்திலும் இளையராஜாவைப் பற்றி நினைக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை எனப் பாரதிராஜா, ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இது பற்றி பாரதிராஜா, "இளையராஜா இல்லாமல் நானில்லை. என்னையும் அவன் அப்படித்தான் நினைப்பான். அவன்கூட எட்டு வருஷம் பேசலை. அப்பவும் அவனை நினைக்காமல் தூங்கினதில்லை.
அவனுக்காகவே சிந்திச்சு காட்சிகளை உருவாக்கி இசைக்கு இடம் கொடுத்திருக்கேன். ‘உன்னோட படம் உண்டாக்கின உணர்வுதான் என்னை நல்ல இசையமைக்கத் தூண்டுது’ன்னு என்கிட்ட சொல்லியிருக்கான்.
சின்ன வயதில் அவனுக்குப் புல்லாங்குழல் வாங்கக் காசிருக்காது. ஆத்துக்குப் போய் நாணல் தட்டையை எடுத்திட்டு வந்து நெருப்பில் வாட்டி, அதில் ஓட்டை போட்டு வாசிப்பான்.

‘கமல், ரஜினிக்கெல்லாம் நீ வாசிச்சிருக்கலாம். எனக்கு வாசித்ததுதான்டா முதல் வாசிப்பு'ன்னு சொல்வேன். வெள்ளையா சிரிப்பான். அப்ப பத்து வயசுப் பையனாக கங்கை அமரன் பாட்டு எழுதுவான். அதெல்லாம் நான் கண்டு உணர்ந்த அழகு. இங்கே யாருக்காவது கிடைச்சிருக்குமா?’' எனக் கூறியிருக்கிறார்.
கடந்த 2023-ம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியான 'மாடர்ன் லவ் சென்னை' ஆந்தாலஜி சீரிஸில் பாரதிராஜா ஒரு எபிசோடை இயக்கியிருந்தார். 'நாடோடி தென்றல்' படத்திற்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய இந்தப் படைப்பிற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.




















