2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஒரு டிக்கெட் விலை ரூ.95 கோடியா? விண்ணை தாண்டும் ...
சொந்த ஊர் தேனியில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் மக்கள்
இயக்குனர் இமயம் என்று போற்றப்படுகிற பாரதிராஜா நேற்று காலமானார். பாரதிராஜாவின் உடல் சென்னை, நீலங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
தன் மகள் ஜனனியிடம், தான் இறந்தால், தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான தேனியில் உள்ள பண்ணை வீட்டில் தன்னுடைய உடலைப் புதைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் பாரதிராஜா. அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என நேற்று அவருடைய குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு நேற்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து தேனி மாவட்டம் காட் ரோட்டில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப் மற்றும் தேனி மாவட்ட எஸ்.பி சினேக பிரியா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். பண்ணை வீட்டின் முன்புறத்திலேயே உடலைப் புதைப்பதற்காக குழி தோண்டப்பட்டது.

இதையடுத்து நேற்று இரவு சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக பாரதிராஜாவின் உடல் கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 6 மணி அளவில் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு வந்தடைந்தது. இன்று மதியம் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பாரதிராஜாவின் உடல் வைக்கப்பட்டு, மதியம் மூன்று மணிக்கு முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
இதற்காக பண்ணை வீட்டைச் சுற்றி சுமார் 700 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரதிராஜாவின் நண்பர்களும், தேனி மாவட்ட மக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





















