செய்திகள் :

பிரக்ஞானந்தா: 'இது புதிய மாசம், நீ நல்லா விளையாடுவ' - அம்மாவின் வார்த்தை... ஆட்டத்தை மாற்றிய தருணம்!

post image

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. ஒரு கட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தவர், அதன்பின் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டு வந்து கோப்பையைக் கைப்பற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால், தனது தாயின் நம்பிக்கை வார்த்தைகள் இருந்ததாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் பிரக்ஞானந்தா.

சறுக்கலில் தொடங்கிய பயணம்!

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா

நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் தொடக்கம் பிரக்ஞானந்தாவுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. முதல் சுற்றில் வெஸ்லி சோவை வீழ்த்தி நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்கிய அவரால், அடுத்தடுத்த சுற்றுகளில் அதே ஆட்டத்தைத் தொடர முடியவில்லை. அலிரேசா ஃபிரோவ்ஜா மற்றும் சக இந்திய வீரர் குகேஷ் ஆகியோரிடம் தோல்வியைத் தழுவியதால், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டார். இதனால், தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்புகள் குறையத் தொடங்கின.

அம்மாவின் வார்த்தை... ஆட்டத்தை மாற்றிய தருணம்!

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி தனது தாயார் நாகலட்சுமியுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார் பிரக்ஞானந்தா. அப்போது அவர், "இது புதிய மாதம்... நீ நிச்சயம் நன்றாக விளையாடுவாய்" என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து பிரக்ஞானந்தா கூறும்போது, "அலிரேசாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பு அம்மாவிடம் பேசினேன். அவர் அப்படிச் சொன்னபோது, அம்மாக்கள் எப்போதும் சொல்வது போன்ற ஒரு சாதாரண விஷயமாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஆனால், அதன்பிறகு தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களில் வென்றேன். எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவருக்குத் தெரிந்திருக்கிறது என நினைக்கிறேன்" என்று ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார்.

கார்ல்சனை இருமுறை வீழ்த்தய் பிரக்ஞானந்தா! | AI Image
கார்ல்சனை இருமுறை வீழ்த்தய் பிரக்ஞானந்தா! | AI Image

வியக்க வைத்த கம்பேக்!

தாயின் வார்த்தைகள் தந்த உத்வேகமோ என்னவோ, அதன்பிறகு பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தில் அசுரத்தனமான வேகம் தெரிந்தது. தனது ஆட்ட அணுகுமுறையை மாற்றிக்கொண்ட அவர், அதிகக் கட்டுப்பாட்டுடனும் வேகத்துடனும் விளையாடத் தொடங்கினார். இதன் விளைவாக, உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் உள்ளிட்ட முன்னணி வீரர்களை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். தனது ஆட்டம் குறித்து பேசிய அவர், "நான் சற்று வேகமாக விளையாட முடிவு செய்தேன். ஒவ்வொரு போட்டியிலும் எனக்கு நேர அனுகூலம் இருந்தது. அதே நேரத்தில் தரமான நகர்வுகளையும் செய்ய முடிந்தது. அது நிச்சயமாக எனக்கு உதவியது," என்றார்.

இறுதிப் போட்டியில் திக் திக் நிமிடங்கள்!

தொடரின் 10-வது மற்றும் கடைசிச் சுற்றில், ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. வெள்ளைக் காய்களுடன் ஆடிய அவர், போட்டியின் நடுப்பகுதியில் கீமர் செய்த சில தவறுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

45-வது நகர்வில் வெற்றியை உறுதி செய்தாலும், கடைசி நிமிடங்கள் பதற்றமாகவே இருந்ததாகக் கூறுகிறார். "வெற்றி பெறப்போகிறேன் என்பது சில நகர்வுகளுக்கு முன்பே தெரிந்துவிட்டது. ஆனாலும், வெற்றியை உறுதி செய்ய விரும்பினேன். ஒரு கட்டத்தில் என்னால் யோசிக்கவே முடியவில்லை; என் கைகள் தானாக நகர்வுகளைச் செய்தன. அவர் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகுதான் நிம்மதியடைந்தேன்" என்று அந்தத் தருணத்தை விவரித்தார்.

இந்த வெற்றியின் மூலம், பிரக்ஞானந்தா 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, சுமார் $100,000 பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றார். நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.!

வாழ்த்துகள் சாம்பியன் பிரக்ஞானந்தா.!

செஸ் உலகின் இளம் ராஜா! - புதிய அத்தியாயத்தை எழுதும் பிரக்ஞானந்தா!

உலக செஸ் அரங்கில் ஜாம்பவான்களின் பெயர்கள் எப்போதும் நிலைத்து நிற்கும். காஸ்பரோவ், ஆனந்த், கார்ல்சன் என நீண்ட அந்தப் பட்டியலில், இதோ ஒரு புதிய இந்திய இளைஞன், தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்திருக்கி... மேலும் பார்க்க