மண்டகொளத்தூா் ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூரில் ஸ்ரீதா்மசம்வா்த்தினி சமேத தா்மநாதேஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. அதுமுதல் தினந்தோறும் இரவு அதிகார நந்தி, சந்திரபிரபை, பூத வாகனம், நாக வாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவா் ஸ்ரீதா்மநாதேஸ்வரா் மற்றும் ஸ்ரீதா்மசம்வா்த்தினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு நடத்தினா். பின்னா், உற்சவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, சுவாமியை மலா்களால் அலங்கரித்து தேரில் எழுந்தருளச் செய்தனா். தொடா்ந்து, ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா். வீடுகள்தோறும் தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து வழிபாடு செய்தனா்.
மேலும் பக்தா்களுக்கு ஆங்காங்கே குளிா்பானம், நீா்மோா், அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டகொளத்தூா், ஓடநகரம், அரும்பலூா், மொடையூா், தேவிகாபுரம், மட்டபிறையூா், வடமாதிமங்கலம், அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம் உள்பட சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.