'தமிழகத்தை ஆளும் கவர்ச்சிக் கூட்டம்; உள்ளாட்சித் தேர்தலில் பதிலடி!' - சூளுரைத்த ...
Ravi Mohan: ``பாதிக்கப்பட்ட அனைவரிடமும்..!" - மன்னிப்பு கேட்ட நடிகர் ரவி மோகன்!
நடிகர் ரவிமோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட திருமண கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து கோரிய வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தபோது, இருவருக்கும் இடையிலான கருத்து மோதல்கள் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் விவாதப் பொருளாயின. இதற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு மே மாதம், "இருவரும் விவாகரத்து தொடர்பாக பொதுவெளியில் ஒருவருக்கொருவர் எவ்விதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது" என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தின் இந்தத் தடையையும் மீறி, நடிகர் ரவிமோகன் ஊடகங்களைச் சந்தித்துப் பேசியதாக அவரது மனைவி ஆர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்ட ரவிமோகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
ஆர்த்தியின் மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில் நடிகர் ரவிமோகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற உத்தரவை மீறிய தனது செயலுக்குப் பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும், இதனைப் பொதுவெளியில் வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "எனது கருத்துக்களால் மனவேதனை அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவிக்கிறேன்" என்றும் அவர் அந்த மனுவில் பதிவிட்டிருந்தார்.

நடிகர் ரவிமோகனின் மன்னிப்பைப் பதிவு செய்துகொண்ட சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அவர் பத்திரிகைகளில் பொது அறிவிப்பு வாயிலாக மன்னிப்பு கோருவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அத்துடன், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இனிமேல் தேவையில்லாமல் பொதுவெளியிலோ அல்லது ஊடகங்களிலோ விவாகரத்து தொடர்பாக எந்தவொரு கருத்தையும் பேசக்கூடாது என்றும் இரு தரப்புக்கும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.













