'மெதுவா படிக்கிறது தப்பா?' - குழந்தையின் தாய் புகார்; மறுக்கும் ஆசிரியை; மௌனத்தி...
மதுரையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு; 'ஆணவக்கொலையா?' - போலீஸார் தீவிர விசாரணை
மதுரை மாநகர் கூடல்நகர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த யோகலெட்சுமி - கருப்பசாமி தம்பதியினரின் மகனாக தமிழ்செல்வன் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.
தந்தை வெளியூரில் உள்ளதால் தாயார் யோகலட்சுமி, தமிழ்செல்வன் அவரது சகோதரி ஆகிய மூன்று பேரும் தனியாக வசித்து வந்துள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் காலையில் கிரிக்கெட் விளையாட செல்வதாகத் தனது தாயாரிடம் கூறிவிட்டு மாணவன் தமிழ்செல்வன் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இதையடுத்து மாலை வரை வீடு திரும்பாத நிலையில் சிறுவனை அவரது தாயார் மற்றும் உறவினர்கள் தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை ஆனையூர் கழிவு நீரேற்று நிலையம் அருகே அப்துல் கலாம் தெரு பகுதியில் உள்ள முட்புதர் அருகே காயங்களுடன் சடலமாக தமிழ்செல்வன் மீட்கப்பட்டார்.
முதற்கட்ட தகவலில் பள்ளி மாணவன் தமிழ்செல்வன் தனது வீட்டருகே உள்ள வேறோரு சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் நட்பு ரீதியாகப் பேசிவந்துள்ளார்.

இது தொடர்பாக மாணவியின் தந்தை சில நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வனை மாணவியிடம் பேசக்கூடாது எனக் கூறி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது மாணவனிடம் உன் வீடு எங்கு உள்ளது என மாணவியின் தந்தை கேட்டபோது பட்டியலினச் சமூகத்தினர் இருக்கும் பகுதி ஒன்றைச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முட்புதரில் மாணவன் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆட்கள் நடமாட்டமே இல்லாத முட்புதருக்குள் மாணவன் நீரில் கிடந்தவாறு சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்தச் சம்பவம் குறித்து ஆணவப்படுகொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கூடல்புதூர் காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

















