பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, பாரதியார் இல்லம், மணப்பாடு கடற்கரை- தூத்துக்குடி முக்க...
முடிந்த மௌன ராகம்; மீண்டும் அரவணைத்து கொண்ட மலையாள டிவி - தமிழில் நடிக்க ஏங்கும் காரைக்குடி ஐஸ்வர்யா
தமிழ்நாட்டில்தான் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் என்றொரு கருத்து முன்பு இருந்தது. 'சித்தி', 'மெட்டி ஒலி' ஆகிய தொடர்கள் இங்கு சக்கைப் போடு போட்டது நினைவிருக்கலாம். கடைசியாக சன் டிவியில் 'ரோஜா' தொடர் சுமார் எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பானது.
ஆனால் மலையாள சீரியல் ஏரியாவிலும் கடந்த ஏழு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த 'மௌன ராகம்' தொடர், தற்போது முடிவடைந்திருக்கிறது.
இந்த தொடர் தொடர்புடைய இன்னொரு செய்திதான் இங்கு ஹைலைட். மலையாள 'மௌன ராக'த்தின் ஹீரோயினாக சுமார் 1700 எபிசோடுகள் வரை நடித்தது நம்மூர்ப் பொண்ணு ஐஸ்வர்யா ராம்சாய்.
ஐஸ்வர்யா தமிழில் 'சுமங்கலி', 'கல்யாண வீடு', 'பாரதிதாசன் காலனி' முதலான சில தொடர்களில் நடித்துள்ளார். தமிழ் சீரியல் தராத பெயர், புகழை மலையாள சின்னத்திரை தந்துள்ளது. திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் 'மகா' வாக நடித்த கீதாஞ்சலியின் உடன் பிறந்த சகோதரி இவர்.
மலையாள சின்னத்திரையில் இவர் கலக்குவது குறித்து முன்பே விகடனுக்குப் பேசியிருந்தார்.

'திருமுருகன் சார் இயக்கிய சில சீரியல்களில்தான் ஆரம்பத்துல இங்க நடிச்சிட்டிருந்தேன். அந்தச் சமயத்துலதான் ‘மௌனராகம்’ மலையாள சீரியல் வாய்ப்பு வந்தது. ஷூட்டிங்லாம் கேரளாவுல இருக்குமேன்னு சின்னத் தயக்கம் இருந்தாலும் வர்ற வாய்ப்பை விட்டா எப்படினு தோண, சரி சொல்லிக் கிளம்பியாச்சு. சொந்த ஊரான காரைக்குடியிலிருந்து எங்க அம்மா எனக்காகவே கேரளா கிளம்பி வந்துட்டாங்க. ஆரம்பத்துல ஷூட்டிங் இருக்கிற நாள்கள்ல மட்டும் கேரளாவுல இருந்துட்டு ஷூட்டிங் முடிஞ்சா ஊருக்கு வந்திடுவோம். ஆனா போகப் போக, அந்த சீரியல் எனக்குத் தந்த ரீச் எங்களை அங்கேயே தங்க வச்சிடுச்சு.
சீரியல்ல கல்யாணிங்கிற என்னுடைய கேரக்டருக்கு மலையாள மக்கள் தந்த ஆதரவு நான் எதிர்பாராதது. சீரியல்ல நடிகக் கமிட் ஆன கொஞ்ச நாள்லயே மலையாளம் நல்லா கத்துக்கிட்டேங்கிறதால என்னை மலையாளப் பொண்ணுன்னே நினைச்சி அவங்க வீடுகள்ல ஒருத்தியா நினைச்சாங்க" என்றிருந்தார், அப்போது.
தற்போது அந்த தொடர் முடிவடைந்து சொந்த ஊரான காரைக்குடிக்குத் திரும்பியிருக்கிற ஐஸ்வர்யாவிடம் பேசினோம்.

``கேரள மக்கள் என் மீது காட்டின அன்பை வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன். இங்க சாதாரண துணை கதாபாத்திரங்களில் நடிச்சிட்டிருந்தப்ப இப்படியொரு வாய்ப்பு வரும்னு எதிர்பார்க்கலை. இன்னும்கூட கேரள மக்கள் என்னை விடுவதாய் இல்லை. 'மௌனராகம்' முடிஞ்ச சூட்டோடயே இன்னொரு சீரியல்லயும் கமிட் ஆகிட்டேன். ஆனா 15 டு 30 தான் ஷூட்டிங்.. அதனால மாதத்தின் முதல் பாதி நாள்கள் தமிழில் சீரியல் பண்ண வாய்ப்பு வந்தால் பண்ணலாம்னு தோணுது. உள்ளூரில் கொண்டாடப்படணும்னு எனக்கும் ஆசை இருக்காதா?" என்கிறார்.




















