`எண்களுக்குள் 2026 உலகக்கோப்பை' - 1248 வீரர்கள், புதிய அணிகள்! தலைசுற்ற வைக்கும்...
'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா?' டு 'எனக்கு எந்த அதிகாரமும் இல்லங்க' தவிக்கும் மாண்புமிகு! | கழுகார்
தமிழக காவல்துறை பணியில் பத்து ஆண்டுகள் நிறைவு செய்து, எந்தவித தண்டனையும் பெறாமல் தூய பணிக் காலத்தை கொண்ட காவல் அதிகாரிகளுக்கு, முதல்வர் பதக்கம் வழங்குவது மரபு. கடந்த ஜூன் 6-ம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் சென்னை காவல்துறையில் பணியாற்றும் சிலருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. பதக்கத்தில் முதல்வர் விஜய்க்கு பதில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படமும் கையெழுத்தும் இருந்தாதால் ஷாக் ஆகியிருக்கிறார்கள் அதிகாரிகள்.
'ஆட்சி மாறி, இத்தனை அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்தும் முந்தைய முதல்வர் படம் பொறிந்த பதக்கத்தை வழங்குகிறார்களே!' என சர்ச்சைகள் வெடிக்க, விவகாரம் வெளியே வராமல் மூடி மறைத்திருக்கிறார்கள் உச்ச அதிகாரிகள். 'ஆட்சி மேலிடத்தின் மீது காவல் அதிகாரிகளுக்கு எந்தவித பயமும் இல்லை.. ரொம்பவே அசால்ட்டாக இருக்கிறார்கள்' என்பதற்கு இதைவிட ஒரு நல்ல உதாரணம் இருக்க முடியாது என முணுமுணுக்கிறதாம் காக்கி வட்டாரம்!
இலைக்கட்சி புள்ளிகளை தொடர்ச்சியாக நடிகர் கட்சி தூக்கிவருவதால் டென்ஷனான சேலத்துக்காரர், 'எதற்காக போகிறார்கள்?' என ஒரு ஆய்வை நடத்தச் சொன்னாராம். அதன் பின்னால் மிகப் பெரியளவில் லட்டுகளும் ஸ்வீட் பாக்ஸுகளும் பரிமாறப்படுவது தெரிய வந்திருக்கிறது. 2021, 2024, 2026 என மூன்று தேர்தல்களிலும் செலவழித்து கடனாளியானவர்கள், 'வந்தவரை லாபம்' என நடிகர் கட்சியுடன் செட்டில்மெண்ட் பேசி இணைந்து வருகிறார்களாம்.
எனவே, 'கடனில் தவிக்கும் மாஜிக்கள், மா.செ-க்களை ஆராய்ந்து ஃபார்ட்டி பண்டில் இருந்து கொஞ்சம் கொடுத்து உதவினால் அவர்களை தக்க வைக்கலாம்' என சேலத்துக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. ஒன்றிய, நகர அளவில் உள்ள நிர்வாகிகளைக் கண்காணிக்க மா.செ-வுக்கு உத்தரவிடவும் வலியுறுத்தியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட சேலத்துக்காரர், 'நிர்வாகிகள் மத்தியில் நம்பிக்கையைக் கொடுத்து வையுங்கள்' என சென்ட்டிமென்ட்டாக பேசி வேறு டாப்பிக் போய்விட்டாராம்!
'மாவட்ட பொறுப்பு தருகிறோம்' எனச் சொல்லி, சிறுத்தைகள் கட்சியிலிருந்த பனையூர் பிரமுகரை தங்கள் கட்சியில் இணைய அழைப்பு விடுத்தது சூரியக் கட்சித் தலைமை. அதை ஏற்ற பனையூர் பிரமுகர் பிரமாண்ட இணைப்பு விழாவுக்கும் ஏற்பாடு செய்தார்.
விழாவுக்கு சுமார் 1,200 பேரை திரட்ட திட்டமிட்ட பனையூர்க்காரர், 'நானும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.. உங்கள் தரப்பிலும் சில நூறுபேரை அழைத்து வாருங்கள். எப்படியாவது அரங்கத்தை நிறைத்துவிட வேண்டும்' என சூரியக்கட்சி நிர்வாகிகளின் உதவியை நாடியிருக்கிறார்.
முதலில் ஓகே சொன்ன லோக்கல் புள்ளிகள், நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு காலை வாரியிருக்கிறார்கள். 'பட்டு மாவட்டத்தின் கிழக்கு பகுதி மாவட்டப் பொறுப்பாளர், அந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு நம்ம ஆள் ஒருத்தர்கூட போகக்கூடாது என கட்டளையிட்டதால்தான், நிர்வாகிகள் காலை வாரிவிட்டிருக்கிறார்கள்' என்ற தகவல் தெரிந்ததும், அப்செட்டாகிவிட்டார் பனையூர் பிரமுகர்.
கச்சத்தீவு விவகாரத்தில் சர்ச்சையான பதில் கொடுத்து சிக்கிய மாண்புமிகுவை, துறை சார்ந்த விவகாரங்களுக்காக பலதரப்பட்டவர்களும் அணுகினார்களாம்.
அதில் ஒரு தரப்பு, 'உங்கள் துறையீன்கீழ் வரும் வாரியப் பொறுப்புகளை எங்களுக்கு கொடுங்கள்' என வேண்டிக் கேட்டிருக்கிறார்கள். மாண்புமிகு எந்த பதிலும் சொல்லாமல் காலம் தாழ்த்திய நிலையில், லட்டுக்கள் தருவதாகச் சொன்னபோதும் மாண்புமிகு செவிமடுக்கவில்லை.
அந்த தரப்பு தொடர்ச்சியாக நச்சரித்த நிலையில், அவர்களை நேரில் அழைத்து, 'நான் உச்சப்புள்ளியின் நண்பர்தான். ஆனால் என்னுடைய துறைசார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம்கூட எனக்கில்லை என்பதுதான் உண்மை' எனக் குமுறியிருக்கிறார்.
இவர் மட்டுமல்ல, பல்வேறு மாண்புமிகுக்களின் துறைகளிலும் அனைத்தையுமே ஆட்சி மேலிடம்தான் தீர்மானிப்பதால், 'பதவி இருக்கு.. ஆனால் அதிகாரம் இல்லையே!' எனக் குமுறுகிறார்கள். 'எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள்' எனக் கேட்டால், நம்மை மாற்றிவிடுவார்களோ என்ற அச்சமும் அவர்களுக்கு மேலோங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள்.
நடிகர் கட்சியின் அமைச்சரவையில் இணைந்து சூரியக் கட்சிக் கூட்டணியை மீசைத் தலைவர் உடைத்துவிட்டதால், கடுப்பாகிவிட்டாராம் அந்த முன்னாள் எம்.எல்.ஏ. மீசைத் தலைவர் கட்சியிலிருந்து விலக வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கும் அவர், சூரியக்கட்சியில் இணையவும் தயக்கம் காட்டுகிறார்.
'அப்படி சேர்ந்தால் சாதாரணப் பேச்சாளராகி விடுவோம். மீண்டும் சீட் கிடைக்கும் எனச் சொல்லமுடியாது. எனவே இஸ்லாமிய கட்சி ஒன்றைத் தொடங்கி தமிழ்நாடு முழுக்க பயணிக்கலாமா...', என்ற ஆலோசனையை தொடங்கியிருக்கிறார்.
விஷயமறிந்த சூரியக் கட்சித் தலைமை, 'உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.. நம் கட்சிக்கு வாருங்கள்.. நல்ல பொறுப்பும் வருங்காலத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் எல்லாமும் கிடைக்கும்' என நம்பிக்கையளித்து தனிக்கட்சி ப்ளானை தடுத்திருக்கிறார்கள். இதற்கிடையே, சூரியகட்சித் தலைமையின் உதவியாளரிடம் பேசிய மீசைத் தலைவர், 'என் கட்சியினரை சேர்த்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்'' என எச்சரித்திருக்கிறார்.

















