மாற்றி மாற்றிப் பேசும் ட்ரம்ப்; பிடிகொடுக்காத இஸ்ரேல்... முடிவுறாமல் தொடரும் ஈரா...
ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார்.
இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ (7), அஸ்வந்த் (5). அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தனர். தினமும் பேரப்பிள்ளைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பள்ளியில் விடுவது, மாலை நேரத்தில் சென்று மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது எனத் தாத்தா வேலுதான் பொறுப்பாகச் செய்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், இன்று காலையும் பேரப்பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த சரக்கு வாகனம் வேலு ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது.
இதனால், நிலைதடுமாறி பேரப்பிள்ளைகளுடன் கீழே விழுந்தார் வேலு. இதில் படுகாயம் ஏற்பட்டதில், தாத்தா வேலு, பேத்தி குணஸ்ரீ, பேரன் அஸ்வந்த் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொரு பேரன் அஜய் காயங்களுடன் உயிர் தப்பினான். இந்தத் துயரச் சம்பவம் குறித்து, காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


















