சிவகாசி: பள்ளி அருகே பட்டாசு ஆலைகள், கடைகளுக்கு அனுமதி; விபத்து அபாயத்தால் பயத்த...
'லட்சம் கண்களும் கோடி இதயங்களும் கொண்டாட!' - உலகக்கோப்பையை வென்று இந்தியா அசத்தல்!
2023 இல் நடந்த ஓடிஐ உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்னமும் நியாயபகம் இருக்கிறது. அகமதாபாத்தில் திரளும் லட்சம் ரசிகர்களையும் அமைதிப்படுத்துவேன் என சொல்லியடித்திருந்தார் பேட் கம்மின்ஸ். கூடியிருந்த அத்தனை ரசிகர்களும் இந்திய அணியின் தோல்வியை காண முடியாமல் போட்டி முடிவதற்கு முன்பே மைதானத்திலிருந்து கிளம்பியிருப்பர். இதோ மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் ஒரு உலகக்கோப்பை மீண்டும் ஒரு இறுதிப்போட்டி. அதே அகமதாபாத் மைதானத்தில். இந்த முறை ஹேப்பி க்ளைமாக்ஸ்.

அங்கே கூடியிருந்த லட்சம் பேரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர்...தேசம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் அத்தனை ரசிகர்களின் இதயங்களிலும் கொண்டாட்டம். மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று சாதித்து நிற்கிறது இந்திய அணி!
இந்திய அணி நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது 256 ரன்கள் டார்கெட். இமாலய டார்கெட் என யாராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அரையிறுதியில் பெத்தேல் அடித்த அடி இன்னமும் நினைவில் நின்றது. இங்கே நியூசிலாந்து சேஸிங்கை தொடங்கியதுமே ரொம்பவே பாசிட்டிவாக இருந்தது. முதல் 2 ஓவர்களில் மட்டும் நியூசிலாந்து அணி 25 ரன்களை சேர்த்திருந்தது. டிம் சீபர்ட் பேட்டை சுழற்றி அதிரடியாக தொடங்கியிருந்தார்.

ஹர்திக்கின் ஓவரில் மட்டும் 21 ரன்கள் வந்திருந்தது. கொஞ்சம் பதட்டமானது. ஆனால், சூர்யா கொஞ்சம் மாற்றி யோசித்தார். சட்டென அக்சர் படேலை உள்ளே இறக்கினார். இந்த சர்ப்ரைஸூக்கு பலன் கிடைத்தது. பின் ஆலனின் விக்கெட் கிடைத்தது. அடுத்த ஓவரிலேயே மாபெரும் ஆயுதமான பும்ராவை இறக்கினார் சூர்யா. அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரச்சினின் விக்கெட் கிடைத்தது. அடுத்த ஓவர் மீண்டும் அக்சருக்கு. க்ளென் பிலிப்ஸின் விக்கெட் கிடைத்தது. பவர்ப்ளேயில் 52-3 என தடுமாறியது நியூசிலாந்து. இப்போதுதான் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் கொஞ்சம் ஆர்ப்பரிக்க தொடங்கினர்.
ஆனால், சீபர்ட் மட்டும் அப்படியே அதிரடியாக ஆடி அரைசதத்தை கடந்தார். பெத்தேலை கொஞ்சம் நியாபகப்படுத்தினார். ஆனால், கடந்த போட்டியை போல் அல்லாமல் இந்த முறை வருண் கொஞ்சம் நன்றாக வீசினார். அவரின் பந்தில் சீபர்ட் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதி ஆனது என தோன்றியது
72-5 என்ற நிலையில் நியூசிலாந்து தடுமாறிய போது கேப்டன் சாண்ட்னரும் டேரில் மிட்செலும் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் இந்திய அணியின் ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு அதிரடியாக ஆடி இறுதிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். எட்ட வேண்டிய இலக்கு மிகப்பெரிதாக இருந்ததால், இவர்களின் போராட்டம் பெரிதாக கைகொடுக்கவில்லை. டேரில் மிட்செல் அக்சரிடமே வீழ்ந்தார். சாண்ட்னரால் தோல்வி வித்தியாசத்தை மட்டுமே குறைக்க முடிந்தது.

நியூசிலாந்து அணி எவ்வளவோ போராடினாலும் முடிவு இந்தியாவுக்கு சாதகமாகவே அமைந்தது. அக்சர் படேல் மிகச்சிறப்பாக வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்திய அணி உலகக்கோப்பையை தக்கவைத்திருக்கிறது. இது இந்திய அணி வெல்லும் மூன்றாவது டி20 உலகக்கோப்பை. ஆனால், மூன்று உலகக்கோப்பைகளில் இந்த உலகக்கோப்பை கொஞ்சம் ஸ்பெஷல். ஏனெனில், சொந்த மண்ணில் இந்திய ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் இந்திய வீரர்களின் கையில் தவழும் முதல் டி20 உலகக்கோப்பை இது. வாழ்த்துகள் டீம் இந்தியா!




















