இரண்டே நாள்கள்தான் டைம்; ஆதார்-பான் இணைந்திருக்கிறதா? வெறும் 4 ஸ்டெப்களில் தெரிந...
BB Tamil 9 Day 84: வம்பிழுத்த கம்ருதீன்; சிறப்பாக நடித்த பாரு - கனியின் எவிக்ஷனில் நடந்தது என்ன?
அமித், கனி போன்ற நல்ல போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாரு, சான்ட்ரா, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்கள் ஆட்டத்தில் இன்னமும் நீடிக்கிறார்கள்.
ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் இந்தச் செய்தியைத்தான் தொடர்ந்து சொல்கிறது. ‘Survival of the fittest’.
வலிமையுள்ளதே எஞ்சும் என்பது வனத்தில் உள்ள விலங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்கள் வாழும் சமூகத்திற்கும் பொருந்தும்தான். ஆனால் விலங்குகளால் செய்ய முடியாத பலவற்றை மனிதன் செய்ய முடியும். பகுத்தறிவு, மனிதநேயம், அன்பு, கருணை என்று பல அற்புதங்களை மனித குலத்தால் நிகழ்த்த முடியும்.
ஒரு சிறிய அலுவலகத்திலேயே அதிகார அரசியலின் உக்கிரமான மோதலைப் பார்க்கலாம். அடாவடியானவர்கள்தான் எப்போதும் மற்றவர்களை முந்திக்கொண்டு மேலே செல்வார்கள் என்றால், தகுதியும் திறமையும் கொண்ட சாமானியர்களின் குரலுக்கு மதிப்பே இல்லையா, அவர்களுக்கு ஏன் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்று பெருமூச்சுதான் வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 84
நேற்றே சொல்லியிருக்க வேண்டும். புதிய திரைப்படத்திற்கான விசேவின் லுக் நன்றாக இருந்தது. “டாப் 10க்குள் இவங்க வந்துட்டாங்க. நியாயமா பார்த்தா கொண்டாடணும். ஆனா அதே பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டி சண்டை போடறாங்க. ஒரு ஸ்பெஷல் ஷோ இருக்கு.. வாங்க பார்க்கலாம்’ என்றார் விசே.
பார்வையாளர்களின் காதுகளில் ரத்தம் வரும்படியான உக்கிரமான சண்டைக்காட்சிகளைத்தான் பிக் பாஸ் டீம் எப்போதும் மிக ஆர்வமாக ஒளிபரப்புகிறது. ஓரிடத்தில் சண்டை நடக்கிறது என்றால், கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பாடலை நிறுத்தி விட்டு ஓடிச் சென்று அதை வேடிக்கை பார்ப்பதுதான் சராசரி மனிதனின் ஆதாரமான குணம்.
வன்முறையின் மீதுள்ள இச்சை நம் ஆழ்மனதில் உறைந்துள்ளது. ஆனால் அவற்றிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதுதான் கலைப்படைப்புகளின் அடிப்படையான நோக்கம். ஆனால் பிக் பாஸ் என்பது வணிகம். பார்வையாளர்களைத் திருத்த முயல்வது அதன் பணியல்ல. என்றாலும் போட்டியாளர்களுக்கு நிகழும் எத்தனையோ இனிமையான தருணங்களையும் அவ்வப்போது ஒளிபரப்பலாம்.
“துஷார் போக அரோதான் காரணம்” - மீண்டும் வம்பிழுத்த கம்ருதீன்
திவ்யாவிடம் தான் மனமார மன்னிப்புக் கேட்டதை அரோரா கொச்சைப்படுத்தி விட்டார் என்று கம்முவிற்கு கோபம். எனவே அவருக்குள் இருக்கும் மிருகம் மீண்டும் விழித்துக்கொள்ள அரோ மீது உக்கிரமாகப் பாய்ந்தார். துஷாரின் வெளியேற்றத்திற்கு அரோரா காரணமில்லை என்று விசே பலமுறை அறிவுறுத்தி, அதை கம்ருதீனும் ஒப்புக்கொண்ட அடுத்த கணத்தில் அதே ஆயுதத்தை கம்ருதீன் எடுக்கிறார்.
போட்டியாளர்களுக்குள் கொம்பு சீவி விடும் பணியை பிக் பாஸ் சிறப்பாகச் செய்கிறது. அதன் மூலம் நிகழும் போட்டி மனப்பான்மையும் போரும்தான் பிக் பாஸின் கச்சாப் பொருள்.

வார இறுதி நாட்களில் ஹோஸ்ட்டின் மூலமாக இதைத்தான் பிக் பாஸ் டீம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. சக போட்டியாளர் மனம் காயப்படுவாரோ என்று ஒருவர் மென்மையாக தன்னுடைய கருத்தைச் சொன்னால் ‘இத்தனை டிப்ளமசியா பேசக்கூடாது… இறங்கி அடிங்க. இல்லாட்டி நீங்க பலவீனமான போட்டியாளர்’ என்று அவர் மீது முத்திரை குத்தப்படும்.
இந்த எபிசோடியிலேயே அதற்கான உதாரணம் இருக்கிறது. ‘டிக்கெட் டு ஃபினாலே யாருக்கு கிடைக்கக்கூடாது?’ என்கிற டாஸ்க்கில் காமெடி கலந்து தன் கருத்தைச் சொன்னார் சபரி. நகைச்சுவை என்பதும் ஓர் அரசியல் ஆயுதம்தான். அதன் மூலம் வலிமையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தன் கருத்துக்களை காமெடி கலந்துசொல்லும் வழக்கமுள்ளவர் சபரி.
‘அப்படியே லெஃப்ட்ல குத்து.. ரைட்ல அடி’ - பிக் பாஸ் ஆட்டத்தின் தாரக மந்திரம்
ஆனால் சபரியை இடைமறித்த விசே “இது சீரியஸான டாஸ்க். அப்பத்தான் நீங்க சொல்றது சம்பந்தப்பட்டவங்களுக்கு அழுத்தமா புரியும். மறுபடியும் சொல்லுங்க. டேக் 2” என்று காரசாரமாக பேசவேண்டிய நெருக்கடியை அவருக்கு உருவாக்கினார். போட்டியாளர்களை அவர்களின் இயல்பின்படி இயங்கவிடாமல் “எதிராளியின் முகத்தில் குத்து.. ஓங்கி அடி. அப்பத்தான் விறுவிறுப்பா இருக்கும்’ என்பது பிக் பாஸ் ஆட்டத்தின் அடிப்படையான இயங்குமுறையாக இருக்கிறது.
போட்டியாளர்கள் புத்திசாலித்தனமானவர்களாக இருந்தால் பிக் பாஸின் இந்த தந்திரத்தை முறியடிக்க முடியும். டாஸ்க் நேரத்தில் தங்களின் கருத்தை வலிமையாகச் சொல்லிவிட்டு ‘இந்த கேமை இப்படித்தான் ஆட முடியும்’ என்கிற புரிதலுடன் சக போட்டியாளர்களுடன் புன்னகையுடன் நட்பைத் தொடர முடியும். ஆனால் மனிதன் அத்தனை முதிர்ச்சியானவனா என்ன?

பிக் பாஸ் வீட்டிற்கு மட்டுமல்ல. நமக்குமே இது பொருந்தும். இந்த ஷோவில் நடக்கும் சண்டைகளைப் பார்க்கும் போது “ஏன்யா.. இப்படி அடிச்சுக்கறாங்க.. உக்காந்து நிதானமா பேசலாம்… இல்லன்னா கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம். ஏன் இத்தனை எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும்” என்று உபதேசம் சொல்லத் தோன்றும். ஆனால் அன்றாட வாழக்கையில் நாமே அப்படி இல்லை என்பதுதான் வேடிக்கை. முன்கோபமும் அகங்காரமும் ஒரு விவாதத்தில் தன்னுடைய குரலே இறுதியாக இருக்க வேண்டும் என்கிற வெறியும் சண்டையை வலுவாக போடச் செய்யும்.
கம்மு - அரோரா சண்டையில் ‘டிரையாங்கிள் ரொமான்ஸூம்’ கலந்து பேசப்படுவதை ஒருவிதமான எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தார் பாரு. ‘அரோ சொன்னது அவங்க கருத்து. உங்களோட கருத்து உங்களுடையது. அப்படி எடுத்துட்டு போங்களேன்” என்று கம்ருதீனுக்கு திவ்யா சொன்னது நல்ல உபதேசம். ஆனால் கம்ருதீன் அப்படி அடங்குபவரா என்ன?
தவறான விஷயங்களில் கம்ருதீனுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து உங்களின் பெயரையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று வினோத்திற்கு பல முறை உபதேசிக்கப்பட்டும், கம்முவிற்கு ஒரு பிரச்னை என்றால் வினோத் உடனே ஓடி வந்து முட்டு கொடுக்கிறார். இப்போதும் அதுதான் நடந்தது.
இந்தச் சமயத்தில் கம்முவை இடைமறித்த விக்ரம் ஒரு சிறப்பான உபதேசத்தை சொன்னார். “உனக்கு ரெட் கார்டு தரணும்ன்ற மாதிரி சூழலில் உனக்காக உண்மையாகவே அரோ அழுதார்”. யார் நமக்கு உண்மையான நண்பன், யார் நம்மைச் சுரண்டுபவன் என்கிற புரிதல் கம்முவிடம் இல்லை. அதனால்தான் அவர் பாருவைத் தேர்ந்தெடுத்தார். அந்த டாக்ஸிக் நட்பால் இப்போது அவஸ்தைப்படுகிறார்.

‘எனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்ல. அவனுக்கு ஒரு கண்ணாவது போகணும்’ - பிக் பாஸின் சிறப்பான டாஸ்க்
“யம்மா தாயி.. நீ பீட் பாக்ஸிங்கை நிறுத்து. பார்க்க நல்லால்ல” என்று சுபிக்ஷாவின் சகோதரர் வலியுறுத்திச் சென்றாலும் சுபிக்ஷா அடங்குவதாக இல்லை. அந்தத் திறமையை அவர் நிச்சயம் வெளியில் சென்று நன்றாக வளர்த்துக் கொள்ளட்டும். ஆனால் அதை அரைகுறையாக கற்றுக்கொண்டு ‘டுப்புசிக்கு.. டுப்புசிக்கு’ என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தால் பார்வையாளர்களுக்கு எரிச்சல் வந்து விடும்.
“சரி.. பாடுங்க” என்று விசே சிரித்துக்கொண்டே அனுமதி கொடுக்க, எந்தவித ரைமிங்கும் இல்லாமல் சுபிக்ஷா பாடினார். அதற்கு பாரு தந்த எக்ஸ்பிரஷன் இருக்கிறதே?! காணக் கண் கோடி வேண்டும்.
டாப் 10 போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொல்லி “எனக்கு கிடைக்கலானாலும் பரவாயில்ல. `டிக்கெட் டு பினாலே' இவங்களுக்கு போகக்கூடாதுன்னா.. யாரைச் சொல்வீங்க?” என்று பிக் பாஸ் வழக்கப்படி ஒரு குரூரமான ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார் விசே.
சான்ட்ராவின் பெயரை அரோவும் சபரியும் சொன்னது சரியான விஷயம். ‘பிக் பாஸையும் மதிக்கல. யாரையும் மதிக்கறதுல்ல” என்று பாருவையும் கம்முவையும் சொன்னார் சுபிக்ஷா. “டாஸ்க்கும் சரியா பண்றதில்ல. யாரையும் பேச விடறதில்ல” என்கிற காரணத்தை திவ்யாவை வைத்து சொன்னார் விக்ரம். (இதுதான் பின்னர் மிகப் பெரிய சண்டையாக மாறியது!)

பாருவையும் வினோத்தையும் காரணம் கட்டி திவ்யா நீளமாகப் பேச “இது பர்சனல் மாதிரி தெரியுது. வேற சொல்லுங்க” என்றார் விசே. அடுத்த டர்னில் கம்ருதீன் + விக்ரம் பெயரைச் சொல்லி பல்டி அடித்தார் திவ்யா. “வேலை செய்யறதில்ல. எதையும் ஸ்போர்டிவ்வா எடுத்துக்கறதில்ல” என்று பாருவை கம்ருதீன் போட்டுக் கொடுக்க பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல். (வழக்கம் போல் பாருவின் எக்ஸ்பிரஷன் கலக்கல்!)
திவ்யாவின் நீளமான விளக்கத்தைக் கேட்க முடியாமல் சைலன்ட்டாக பிரேக் விட்டுச் சென்றார் விசே. ‘தலை சுத்திடுச்சுல்ல” என்று சிரித்தபடி மீண்டும் வந்த காப்பாற்றப்பட்டவர்கள் பற்றிய தகவலைச் சொன்னார். எஞ்சியிருந்தவர்கள் கனி மற்றும் சான்ட்ரா.
கனியை வெளியேற்றி சான்ட்ராவை காப்பாற்ற முயல்கிறார்களா?
‘இரண்டு பேர்ல யாரு இருக்கணும்?” என்று மறுபடியும் ஒரு கொம்புசீவி கேள்வியை விசே கேட்க எல்லோருமே ‘கனி வேண்டும். சான்ட்ரா வேண்டாம்’ என்று மனப்பாடப்பகுதியை சொல்வது போல் சொன்னார்கள். அதுதான் நியாமும் கூட. ஆனால் ‘என் வழி.. தனி வழி..’ என்று செல்லும் பாரு மட்டும் ‘சான்ட்ரா இருக்கணும். கனி வேண்டாம்” என்று சொன்னார். அவருக்கு கனியைப் பிடிக்காது என்பது காரணம். அந்த ரிவேன்ஜ் மோடில், சான்ட்ரா தகுதியானவரா என்பதை பாரு யோசிக்கவில்லை. அதுதான் பாரு.
யாருமே எதிர்பார்க்காதபடியாக ‘கனி’யின் பெயர் கொண்ட கார்டை நீட்டினார் விசே. (பிக் பாஸ்.. உங்க கிரவுண்டு.. உங்க உருட்டு!). ஏறத்தாழ அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி. கனியும் அதிர்ச்சியடைந்து பிறகு சுதாரித்துக் கொண்டார். ஆனால் ஒருவரின் முகத்தில் மட்டும் பயங்கர சந்தோஷம். அது பாரு என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

‘டிக்கெட் டு பினாலே எனக்கு வரக்கூடாதுன்னு பலரும் சொன்னாங்க. அதுல கனியும் ஒருத்தர். இப்ப பார்த்தீங்களா.. எனக்கு நீதி கிடைச்சிருக்கு. இந்த நாளை மறக்கவே மாட்டேன்” என்று ஆனந்தப் பரவசத்தில் அழுதார் பாரு.
கனியின் எவிக்ஷனால் விக்ரமும் சபரியும் மனம் உடைந்து அழுதார்கள். “என்னங்க இது.. நம்பவே முடியல. இது நியாயமே இல்ல” என்று விக்ரம் கதறினார். ஆனால் பிக் பாஸ் அப்படிப்பட்ட டிவிஸ்ட்களை தந்துதான் பழக்கம்.
சான்ட்ராவிற்கும் கனி வெளியேறுவது குறித்து சந்தோஷமாகத்தான் இருக்க முடியும். ஆனால் பாருவைப் போல வெளிப்படையாக சந்தோஷப்படாமல் “நான் ஏதாவது ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்று கனியிடம் பாவனையாக மன்னிப்பு கேட்டு தன் இமேஜை காப்பாற்றிக் கொண்டது போல் தோன்றியது.
‘கனி வெளியே போறதுல எனக்கு வருத்தம்பா’ - சிறப்பாக நடித்த பாரு
“கனி.. Well played. Will miss you’ என்று பாசத்துடன் பிக் பாஸ் விடை தர, “நான் வெளியே போறதுல துளியும் கவலை இல்ல. ஆனா உங்க குரலை மிஸ் பண்றதுதான் துயரம். ஒழுங்கா என்னை மிஸ் பண்ணுங்க’ என்று உரிமையுடன் கனி சொன்னது க்யூட்டான காட்சி.
மேடைக்கு வந்த கனி, பிறகு வீட்டார்களிடம் பேசும்போது “மக்களுக்கு பெரிய நன்றி சொல்லணும்” என்று பாரு ஆரம்பிக்க “எதுக்கு கனியை வெளியே அனுப்பினதுக்கா?” என்று சர்காஸ குண்டூசியை சிறப்பாகக் குத்தினார் விசே. “அய்யோ.. இல்ல.. என்னைக் காப்பாத்தியதற்கு.. கனி போனது வருத்தம்’தான்” என்று பாரு நடிக்க ஆரம்பிக்க, விசேவின் டோனில் ‘பாரு.. பாரு..’ என்று கனி குறுக்கிட்டது நல்ல நகைச்சுவை.

பரம எதிரி கனி வெளியே போனதிலும் தான் காப்பாற்றப்பட்டதிலும் குஷியான பாரு, சான்ட்ராவிடம் இது பற்றி எதையோ ஓதிக் கொண்டேயிருக்க “அவங்களை இன்ப்ளூயன்ஸ் பண்ணாதீங்க” என்று மூக்கை நுழைத்தார் திவ்யா. “ஏங்க.. நாங்க என்ன பேசறோம்ன்னு உங்களுக்குத தெரியுமா?. என்னன்னு தெரியாம பேசாத. போ அப்படி..”என்று பாரு எரிந்து விழுந்தார். சான்ட்ராவை காப்பாற்ற முனைவது திவ்யாவிற்கு தேவையில்லாத வேலை.
பிறகு இந்தச் சூழல் திசை மாறி, சுபிக்ஷாவிடம் திவ்யா பேசும் போது “நீங்களும் விக்ரமும் கூடத்தான் ஸ்கிரீன் பின்னாடி பேசினீங்க.. பிக் பாஸ் கண்டிச்சாரு” என்று சம்பந்தமில்லாமல் வாதத்தை ஆரம்பித்தார்.
மாற்றுக்கருத்தை கேட்கவே விரும்பாத ‘அட்ராசிட்டி’ திவ்யா
தான் டாஸ்க்கை சிறப்பாக செய்தும் ‘திவ்யா டாஸ்க் சரியா பண்ணலை” என்று விக்ரம் சொல்லி விட்டார் என்பது திவ்யாவின் கோபத்திற்கு காரணம். அதனால் இந்த ஸ்கீரின் காரணத்தை கொண்டு வந்திருக்கிறார்.
சுபிக்ஷா மனம் உடைந்து அழும் போது ஆறுதல் சொல்லத்தான் விக்ரம் சென்றார். இது எல்லோருக்கும் தெரியும். இதை ஒரு குற்றமாக திவ்யா கொண்டு வந்திருக்க வேண்டாம். ஆத்திரம் யார் கண்ணையும் மறைத்து விடும்.
இந்தச் சண்டை அப்படியே வளர்ந்து விக்ரமும் உள்ளே புகுந்து கத்த “உங்க வீட்ல கத்தச் சொன்னாங்களா?” என்று திவ்யா வாயை விட்டு விட்டார். “இதுல ஏன் என் ஃபேமிலியை இழுக்கறீங்க..?” என்று ருத்ர தாண்டவம் ஆடி விட்டார் விக்ரம்.

பாரு, சான்ட்ரா உள்ளிட்டவர்கள் தன் மீது கடப்பாறையே வீசினாலும் “பீஸூ பிஸா கிழிக்கும் போது யேசு போல முகத்தைப் பாரு” என்கிற மாதிரி பொறுமையாக ஹாண்டில் செய்பவர் விக்ரம். வார இறுதி நாட்களில் தன் மீது குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் உடனே ரியாக்ட் ஆகாமல், தலைகுனிந்தபடி புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருப்பார்.
அப்படிப்பட்ட சாந்த சொருபீயான விக்ரம், இன்று மிகவும் ஆவேசப்படுகிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்களை யூகிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, கனியின் எவிக்ஷன் அவரை மனதளவில் மிகவும் பாதித்திருக்க வேண்டும். அந்த டென்ஷனில் இந்தச் சண்டையும் சேர்ந்ததால் அவர் வெடித்திருக்கலாம். இரண்டாவது, தன் மனைவியுடன் மிகவும் அட்டாச் ஆனவர் விக்ரம். அவருடைய பெயர் சம்பந்தமில்லாமல் வந்ததால் கோபம் கொண்டிருக்கலாம்.
ஆவேசமடைந்த விக்ரம், மற்றவர்கள் சமாதானப்படுத்தியதால் சற்று நிதானம் வந்து ‘திவ்யா.. நீங்க சொல்றதையெல்லாம் சொல்லிட்டீங்க. இப்ப நான் சொல்றத கேளுங்க..” என்று எத்தனையோ மன்றாடியும் அதற்கு திவ்யா ஒப்புக் கொள்ளவேயில்லை. எதிராளியின் மீது அத்தனை புகாரையும் பதிவு செய்து விட்டு அந்த விவாதத்திற்கு தான் தயாராக இல்லை என்று ஓடிச் சொல்வது முதிர்ச்சியற்ற மனோபாவம். மற்றவர்களின் பிரச்சினைகளில் நியாயமாக பஞ்சாயத்து பேசும் திவ்யாவால் தன்னுடைய பிரச்சினையில் அந்த நிதானத்தையும் நியாயத்தையும் கடைப்பிடிக்க முடியவில்லை.
“வாங்க. பேசலாம்.. எப்ப வேணா காத்திட்டிருப்பேன்” என்று விக்ரம் மன்றாட ‘அது நடக்கவே நடக்காது” என்று கோபத்துடன் விலகினார் திவ்யா. தான் கத்துவதையெல்லாம் கத்தி விட்டு எதிராளியின் கருத்தை கேட்காமல் விலகுவது சான்ட்ராவின் பாணி. அதையே திவ்யாவும் இப்போது கற்றுக்கொண்டார் போல.

தல பதவியில் இருப்பதால் இங்கும் அங்குமாக பொறுமையுடன் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார் கம்ருதீன். வீட்டில் ஒரு சண்டை என்றால் அங்கு பாரு இல்லாமல் இருக்க மாட்டார். ஆனால் இப்போதோ வேறு விதமான சூழல் என்பதால் பாரு தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
தன் வாதத்தை மிக நீளமாக வைக்கும் திவ்யாவின் போக்கு குறித்து விசே இப்போதுதான் உணர்த்திக் காட்டி விட்டுச் சென்றார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அதையேதான் திவ்யா செய்கிறார்.
கனியின் எவிக்ஷன் நியாயமானதா? உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்.

















