BB Tamil 9: "இது ரொம்ப Cheap-ஆ இருக்கு" - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜ...
Cinema Roundup 2025: இந்தாண்டு பேசுபொருளான சினிமா நிகழ்வுகள் |முழு தொகுப்பு
லவை2025-ம் ஆண்டு இறுதி நாட்களை எட்டியிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு அதிகம் பேசு பொருளான, கவனம் ஈர்த்த 25 நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.
* கன்னடத்தில் சிக்கலைச் சந்தித்த தக் லைஃப்:
கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தக் லைஃப் திரைப்படத்தின் புரொமோஷனில் கமல்ஹாசன் 'கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது' என்று கூறிய கருத்தால் கர்நாடகாவில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்க மறுத்தார். இதனால் இத்திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.

* காந்தாரா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்:
IFFI 2025 நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் மேடையில் பேசிய நடிகர் ரன்வீர் சிங், `காந்தாரா' திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போல் பாவித்ததும், படத்தில் வரும் பெண் தெய்வ கதாபாத்திரத்தைப் பெண் பேய் என்று குறிப்பிட்டதும் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளானது. அதன் பின் அவர் அதற்கு மன்னிப்பு கேட்டு பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
* பணி நேரம் குறித்து பேசிய நடிகை தீபிகா படுகோனே:
இந்த ஆண்டு நிறைய தொழிலதிபர்களும், பிரபலங்களும் ஒரு நாளின் சராசரி பணி நேரம் குறித்து பேசி வந்தனர். அந்த வரிசையில் நடிகை தீபிகா படுகோனேவும் சினிமாவில் பணி நேரம் குறித்து பேசியிருந்தார். 'ஒரு நாளைக்கு 8 மணி நேரப் பணி நேரம் மனித உடலுக்கும், மனதுக்கும் போதுமானது' என்றார் அவர். இது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதன் பிறகு அவர் அடுத்தடுத்து கைவசம் வைத்திருந்த திரைப்படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
* நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்:
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிக்கானின் வீட்டில் புகுந்து சிலர் அவரை கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதில் அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சைஃப் அலிகான்.
* வார்னர் பிரதர்ஸை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்:
பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பொருளாதாரக் காரணங்களுக்காக ஏலத்திற்கு வந்தது. இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு கேட்ட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வார்னர் பிரதர்ஸை வாங்கியது.

* யூடியூபில் படத்தை வெளியிட்ட அமீர் கான்:
நடிகர் அமீர் கான் தயாரித்து நடித்த திரைப்படம் 'சித்தாரே ஜமீன் பர்'. ஆட்டிசம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் திரையரங்க வெளியீட்டில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஓடிடி வெளியீட்டுக்கு அனைவரும் காத்திருந்த நிலையில் திரைப்படத்தை நேரடியாக யூடியூபில் வெளியிட்டார் அமீர் கான். இம்முடிவு பெரும் விவாதப்பொருள் ஆனது.
* வெளியான பாகுபலி எபிக்:
பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து, மொத்தமாக எடிட் செய்து 'பாகுபலி எபிக்' என்று இந்த ஆண்டு வெளியிட்டனர்.
* விலைக்கு வந்த பிரேக்கிங் பேட் வீடு:
உலகெங்கும் பெரும் ரசிகர் பலம் கொண்ட வெப் தொடர் 'பிரேக்கிங் பேட்'. அந்தத் தொடரில் வரும் வால்டர் வைட் பயன்படுத்திய வீடு இந்த ஆண்டு ஏலத்திற்கு வந்தது. அல்பகர்கியூ நகரில் உள்ள இந்த வீடு 4 மில்லியன் டாலர் விலை போனது.
* திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா:
நடிகை சமந்தா சமீபத்தில் பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமொருவைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இயக்கத்தில் சமந்தா 'ஃபேமிலி மேன்', 'சிட்டாடல்' ஆகிய வெப் சீரிஸ்களில் நடித்திருக்கிறார்.

* நிரபராதி என அறிவிக்கப்பட்ட திலீப்:
கடந்த 2017-ம் ஆண்டு, நடிகையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார் மலையாள நடிகர் திலீப். இந்த வழக்கில் இத்தனை ஆண்டுகள் விசாரணைக்குப் பின் திலீப் மீது தவறில்லை என்று சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
* ஆஸ்கர் குறித்து பேசிய கங்கனா:
நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்த எமர்ஜென்சி திரைப்படம் ஆஸ்கர் வென்றிருக்க வேண்டும் என்று ஆன்லைனில் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு 'அவர்களது குப்பை ஆஸ்கரை அவர்களே வைத்துக் கொள்ளட்டும், நம்மிடம் தேசிய விருதுகள் உள்ளன' என்று பதிலளித்திருந்தார் கங்கனா.
* எம்புரான் பட சர்ச்சை:
நடிகர் மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'லூசிஃபர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தின் முதல் பாதியில் வந்த காட்சிகள் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த முசாபர் நகர் கலவரத்தைத் தழுவியது போல் இருப்பதாக விமர்சனங்கள் வர, அடுத்தடுத்துக் கண்டனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது.
* தவறாகச் சித்தரித்த கிங்டம்:
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் திரைப்படத்தில் ஈழத்தமிழர்களையும், ஈழப் போரையும் தவறாகச் சித்தரித்து சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளிடம் படம் கடும் கண்டனங்களைப் பெற்றது. திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டன.

* ரசிகைக்கு முத்தம்; விமர்சிக்கப்பட்ட உதித் நாராயணன்:
பிரபல பாடகர் உதித் நாராயணன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரசிகை ஒருவர் அவருடன் புகைப்படம் எடுக்க முற்பட்டார். அப்போது அவர் அந்த ரசிகைக்கு முத்தம் கொடுத்தது சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
* நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது:
இந்திய அளவில் திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு தேர்வானார் பிரபல மலையாள நடிகர் மோகன்லால். 71-வது தேசிய திரைப்பட விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருது பெற்றார்.
*திருமணத்தை அறிவித்த நடிகர் விஷால்:
பல ஆண்டுகளாகத் திருமணத்தைத் தவிர்த்து வந்த நடிகர் விஷால் இந்த ஆண்டு தனது திருமணம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார். நடிகை சாய் தன்ஷிகாவும் தானும் காதலித்து வருவதாக அறிவித்த அவர், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறினார். ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது.

*பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார்:
இந்த ஆண்டு, இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார். ஏப்ரல் மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்.



















