`கரிசல் இலக்கியத்தின் முகவரிகளில் ஒருவர்' - சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாள...
Doctor Vikatan: பிபி (BP) நார்மல்... ஆனாலும், அடிக்கடி தலைச்சுற்றல்... காரணம் என்ன?
Doctor Vikatan: எனக்கு அடிக்கடி தலைச்சுற்றல் (Giddiness) ஏற்படுகிறது, ஆனால், ரத்த அழுத்தம் (BP) சரியாகத்தான் இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்கும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை மருத்துவர் வி.எல். அருள்செல்வன்

தலைச்சுற்றல் ஏற்பட பிபி அளவைத்தாண்டி வேறு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். நம்முடைய பேலன்ஸ் சிஸ்டம் (Balance system), மூளைத்தண்டில் (Brain stem) ஆரம்பித்து உள் காதில் (Inner ear) உள்ள பேலன்ஸ் உறுப்பு வரை இருக்கும். இதில் எங்கு பிரச்னை வந்தாலும் நமக்குத் தலைச்சுற்றல் வரலாம்.
உள் காதில் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்னைகளில், பிபிபிவி (Benign Paroxysmal Positional Vertigo) எனப்படுவது மிக முக்கியமான காரணம். இந்தப் பிரச்னை பாதித்தால் படுக்கும்போதோ, எழுந்திருக்கும்போதோ தலைச்சுற்றல் வரும். ஆனால், அது ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்காது. விட்டுவிட்டு வந்துகொண்டே இருக்கும்.
அடுத்தது வெஸ்டிபுலார் நியூரோனைட்டிஸ் (Vestibular neuronitis) என்ற பிரச்னையால் ஏற்படும் தலைச்சுற்றல். அந்த பேலன்ஸ் நரம்பில் வீக்கம் அல்லது அழற்சி (Inflammation ) ஏற்பட்டு, அதனால் தலைச்சுற்றல் ஏற்படும். மற்றபடி, மூளைக்குப்போகும் ரத்த ஓட்டப் பிரச்னையாலும் தலைச்சுற்றல் வரலாம்.

மைக்ரேன் (Migraine) எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ள பலருக்கு அடிக்கடி தலைச்சுற்றல் வரும். எனவே, நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்று, உங்களுடைய பிரச்னையின் தீவிரம், உடல்நலம் குறித்த பின்னணித் தகவல்கள் ஆகியவற்றைச் சொல்லி ஆலோசனை பெற வேண்டும்.
அதாவது, தலைச்சுற்றல், உங்களுக்கு எப்படி ஆரம்பிக்கிறது, எவ்வளவு நேரம் இருக்கிறது, எத்தனை முறை வருகிறது, அத்துடன் வேறு அறிகுறிகள் இருக்கின்றனவா என்று மருத்துவரிடம் விளக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, காது கேட்பதில் பிரச்னை, காதில் 'கொய்ங்' என்று சத்தம் கேட்பது, வாந்தி, நடப்பதில் பிரச்னை, கண்ணில் பிரச்னை போன்றவை. இவை எல்லாவற்றையும் வைத்து என்ன காரணம் என்று கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















