விருதுநகர்: மாயமான மூதாட்டி; அழைத்துச் சென்ற தாய், மகள் - நகைக்காக கொல்லப்பட்ட க...
Shivam Dube: `கோப்பை வென்ற கையோடு ரயிலில் பயணம்: `அது அந்த கிரிக்கெட் வீரரா?' - TTR கேட்ட கேள்வி
சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), 10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது. கோப்பையைத் தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணியில், வீரா்கள் ஆங்காங்கே தடுமாறினாலும், ஒரு அணியாக இந்தியா தனக்கான இலக்கை அடைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
T20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற உற்சாகத்தில் நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். வழக்கமாக இத்தகைய வெற்றிகளுக்குப் பிறகு கிரிக்கெட் வீரர்கள் விமானங்களில் (Flights) செல்வதையே விரும்புவார்கள். ஆனால், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் சிவம் துபே, அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு ரயிலில் 3-வது ஏசி பெட்டியில் சாதாரணப் பயணியைப் போல பயணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்வதற்குத் தனது குடும்பத்தினருடன் விமான டிக்கெட் தேடியுள்ளார் துபே. ஆனால், அனைத்து விமானங்களும் நிரம்பிவிட்டதால் டிக்கெட் கிடைக்கவில்லை. சாலை மார்க்கமாகச் செல்வதை விட ரயில் பயணம் விரைவாக இருக்கும் என்பதால், அதிகாலை 5:10 மணி ரயிலில் செல்ல அவர் முடிவு செய்தார். "விமானங்கள் இல்லாததால் அதிகாலை ரயிலைத் தேர்ந்தெடுத்தேன். சாலைப் பயணத்தை விட இதுவே சிறந்தது எனத் தோன்றியது" என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கோப்பையை வென்ற கையோடு ரயிலில் சென்றால் ரசிகர்கள் அடையாளம் கண்டு மொய்த்துவிடுவார்கள் என்ற பயம் துபேயின் குடும்பத்தினருக்கு இருந்தது. இதனால், தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் இருக்கத் தலையில் தொப்பி, முகக் கவசம் (Mask) மற்றும் நீண்ட கைகள் கொண்ட டி-ஷர்ட் அணிந்து ஒரு சாதாரணப் பயணியைப் போல ரயில் நிலையத்திற்குச் சென்றார்.
ரயில் கிளம்பும் கடைசி நிமிடம் வரை காரிலேயே காத்திருந்து விட்டு, அதன் பிறகே ரயிலில் ஏறியுள்ளார்.
ரயில் பயணத்தின் போது பெரும்பாலும் மேல் படுக்கையிலேயே (Top Berth) அமர்ந்து யாரும் தன்னை கவனிக்காதவாறு பார்த்துக் கொண்டார். டிக்கெட் பரிசோதகர் (TTR) வந்தபோது ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.
பெயரைக் கவனித்த அதிகாரி, "சிவம் துபே? அது அந்த கிரிக்கெட் வீரரா?" என்று கேட்டுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட துபேயின் மனைவி, "இல்லை, இல்லை.. அவர் எங்கே இங்கே வரப்போகிறார்?" என்று கூறி மழுப்பியுள்ளார். அந்த அதிகாரியும் அதை நம்பி நகர்ந்துவிட்டார்.
எவ்வித இடையூறுமின்றி மும்பை வந்து சேர்ந்த துபே, அங்கு காவல்துறையினரின் உதவியுடன் பாதுகாப்பாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினார். ஒரு உலகக் கோப்பை வெற்றியாளர், கூட்ட நெரிசலைத் தவிர்க்கச் சாதாரணப் பயணியைப் போல ரயிலில் பயணித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



















