"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி
ஆட்டத்தை தொடங்கிய மகாராஷ்டிரா பாஜக; தொட்டதற்கெல்லாம் டெல்லி சந்திப்பு! - சிக்கலில் ஷிண்டே?
மகாராஷ்டிராவில் தற்போது பா.ஜ.க, சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கூட்டணி அரசு பதவியில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் சாதாரண ஒரு அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராகவும், துணை முதல்வராகவும் மாற்றி பா.ஜ.க அழகு பார்த்தது. தற்போது மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சிக்கு எந்த ஒரு பிரச்னை வந்தாலும் உடனே அதனை உள்ளூர் மட்டத்தில் குறிப்பாக மாநில பா.ஜ.க தலைவர்களோடு பேசித்தீர்த்துக்கொள்ளாமல் நேரடியாக டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர்களை சந்தித்து சந்தித்து புகார் செய்து பிரச்னையை தீர்த்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் எத்தனை முறை டெல்லிக்கு வந்தாலும் அவருக்கு பா.ஜ.கவின் கதவு திறந்தே இருக்கிறது. கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு 12 முறைக்கும் மேல் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார்.

கடந்த மாதம் மட்டும் இரண்டு முறை டெல்லிக்கு சென்று அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த மாதம் கூட மீண்டும் ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், ``அப்பா எனக்கு உதவி செய்யுங்கள் என்று டெல்லியில் சென்று கெஞ்சிவிட்டு வந்திருப்பதாக" குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலையொட்டி மும்பை அருகில் உள்ள கல்யான் மற்றும் டோம்பிவலி பகுதியில் சிவசேனா(ஷிண்டே)வில் இருந்து சில தலைவர்களை மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான் தங்களது கட்சிக்கு இழுத்துள்ளார்.
இதனால் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியடைந்துள்ளார். உடனே மாநில அமைச்சரவை கூட்டத்தை ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா அமைச்சர்கள் புறக்கணித்தனர். அதோடு ஏக்நாத் ஷிண்டே நேரடியாக டெல்லிக்கு சென்று அமித் ஷாவிடம், ``என் கட்சித் தலைவர்களை உங்கள் கட்சிக்காரர்கள் பறித்துக்கொண்டார்கள்" என்று புகார் செய்தார். அவரது புகாரை பொறுமையாக கேட்டுக்கொண்ட அமித் ஷா, மாநில அமைச்சரவை கூட்டத்தை சிவசேனா அமைச்சர்கள் புறக்கணித்ததை சுட்டிக்காட்டினார்.
அதோடு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவானும் பா.ஜ.கவின் நலனுக்காகவே எந்தவித நடவடிக்கையும் எடுப்பார்கள் என்று ஏக்நாத் ஷிண்டேயிடம் அமித் ஷா தெளிவாக குறிப்பிட்டார். மேலும் உங்களது தலைவர்களை நீங்கள்தான் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் உங்களது குறைகளை தாராளமாக தன்னிடம் சொல்லலாம் என்றும் அமித் ஷா தெரிவித்தார். இதற்கு முன்பும் பல முறை சிவசேனா அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அப்போதெல்லாம் ஏக்நாத் ஷிண்டே டெல்லிக்கு சென்று பா.ஜ.க மேலிட தலைவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அடிக்கடி டெல்லி செல்வது குறித்து கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே, ``எந்த பிரச்னையும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். பீகார் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவே டெல்லி சென்றேன்''என்றார்.
இது குறித்து மாநில பா.ஜ.க மூத்த அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில்,''கூட்டணி தலைவர்களை சந்தித்து பேசுவதில் தவறில்லை. உல்லாஸ்நகரில் சிவசேனா எங்களது தலைவர்களை இழுத்தார்கள். அதற்கு பதிலடியாகத்தான் சில சம்பவங்கள் நடந்தது. பா.ஜ.க எப்போதும் தனது கூட்டணி கட்சியை மதிக்கிறது. அவர்களின் கவலைகளை சரி செய்யவும் தயாராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
பா.ஜ.க கதவு திறந்திருப்பது ஏன்?
பா.ஜ.கவிற்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்த சிவசேனாவை 2022ம் ஆண்டு இரண்டாக உடைத்து உத்தவ் தாக்கரேயை செல்லாக்காசாக மாற்ற ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிற்கு உதவி செய்தார். அதோடு சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே வசம் கொடுக்கவும் பா.ஜ.க உதவி செய்தது. இப்போதும் மகாராஷ்டிராவில் அடுத்த தேர்தலில் எப்படியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. அதனால் தான் ஏக்நாத் ஷிண்டே எப்போது டெல்லிக்கு வந்தாலும் அவரை முகம் கோணாமல் வரவேற்று அவரது குறையை பா.ஜ.க தலைவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது வரும் நாட்களில் தொடருமா என்பது சந்தேகம்தான் என்று பா.ஜ.கவினரே தெரிவித்து வருகிறார்கள்.















