"15 நாள் ஷூட், பவதாரிணி பாடல்" - பாரதிராஜாவின் கடைசிப் படமான 'தாய் மெய்' குறித்த...
ஈரான் வீழ்த்திய ஹெலிகாப்டரிலிருந்து தப்பிய வீரர்கள்; டிரோன் படகு மூலம் எப்படி மீட்டது அமெரிக்கா?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 60 நாள்களுக்கும் மேலாக அமலில் இருந்து வந்த போர்நிறுத்தம் முடிவுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் அபாச்சி ரக ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியது.
இந்த ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு வீரர்களும் பத்திரமாக கடலுக்குள் குதித்தனர். அவர்களை உடனே அமெரிக்கப் படையினர் மிகவும் பத்திரமாக மீட்டனர். அமெரிக்க கடற்படை ஆளில்லா ட்ரோன் படகு ஒன்றை சம்பவ இடத்திற்கு அனுப்பி அவர்கள் இரண்டு பேரையும் மீட்டுக்கொண்டு வந்துள்ளது.
அமெரிக்கா பயன்படுத்திய இந்த ஆளில்லா ட்ரோன் படகு 1,000 பவுண்டு எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதுடன், மணிக்குச் சுமார் 140 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. டெக்சாஸைத் தலைமையிடமாகக் கொண்ட சரோனிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இது, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஆளில்லா கப்பல்கள் மற்றும் பிற டிரோன்களைக் கண்காணிக்கும் கடற்படையின் 'டாஸ்க் ஃபோர்ஸ் 59' (Task Force 59) பிரிவின் ஒரு பகுதியாகும்.
சரோனிக் கோர்செய்ர் (Saronic Corsair) எனப்படும் இந்த டிரோன் படகு 24 அடி நீளமுள்ள, தானியங்கி முறையில் இயங்கக் கூடியது ஆகும்.

இது கடந்த ஆண்டுதான் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த டிரோன் படகுகளைத் தயாரிக்கும் நிறுவனம், தனது 'கோர்சேர்' ரகக் டிரோன் படகுகளைத் தயாரிக்க சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான உற்பத்தி ஒப்பந்தத்தை அமெரிக்க அரசிடமிருந்து பெற்றுள்ளது. ஆண்டுக்கு 20-க்கும் மேற்பட்ட ஆளில்லா டிரோன் படகுகளைத் தயாரிக்க இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அமெரிக்க ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் ஈரானுக்குப் பதிலடி கொடுத்துள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியையொட்டி இருந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. மேலும் புதிதாக அமெரிக்காவுக்குச் சொந்தமான டிரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தி இருக்கிறது.
ஹார்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே வான்வழி மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று அதிகாலையில் ஓமன் நாட்டின் புஷெர் மாகாணத்தின் வான்பரப்பில் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவலர் படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வீடியோவிலும் சமூக ஊடகங்களில் பரவி இருக்கிறது. இத்தாக்குதல்களால் இரு நாடுகளிடையே மீண்டும் பெரிய அளவில் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. ஏற்கனவே இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் ஈரான் மீது பதிலுக்குத் தாக்கியது.
இஸ்ரேலிடம் தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவே ஈரான் மீது பதிலடித் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் நடந்து வந்த பேச்சுவார்த்தையின் முடிவு கேள்விக்குறியாகி இருக்கிறது.
அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அளித்த பேட்டியில், ''தெஹ்ரானின் உறுதியைச் சோதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஈரானிய ஆயுதப்படைகள் எந்தத் தாக்குதலையோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ பதில் அளிக்காமல் விடாது.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் எங்கள் பகுதியை விட்டு வெளியேறுங்கள்," என்று அவர் மேலும் கூறினார். அதேசமயம் அமெரிக்கா தனது சுயபாதுகாப்பு தாக்குதலை முடித்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.


















