குமரி: ``கல்குவாரிகள் உருவாக பொன்னாரும் தளவாய்சுந்தரமும்தான் காரணம்'' - அமைச்சர்...
எந்த பாலை காய்ச்சணும்; எந்த பாலை சுட வைக்கணும்? உணவியல் நிபுணர் அட்வைஸ்!
காலையில் எழுந்ததும் ஒரு கப் டீயோ, காபியோ குடித்தால்தான் சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்குமான முக்கியமான ஊட்டச்சத்தும் பால்தான். அப்படி நமக்கு மிக முக்கியமாகிப் போன பாலை, நாம் சரியான முறையில் காய்ச்சுகிறோமா..?
அப்பா டீ குடிக்கும்போது ஒருமுறை, குழந்தைக்குப் பாலூட்ட ஒரு முறை என பாலை பலமுறை சுடவைக்கும்போது, இது சரிதானா என்று யோசித்துப் பார்த்தது உண்டா?

''பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம்!'' என்கிறார், உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன்.
''காய்ச்சிய பாலை 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும்போது, அதில் இருக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்சியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம்.
ஆனால், பாலை அடிக்கடி சுடவைப்பதால் அந்த சத்துக்கள் வீணாகிவிடும் என்றால், பால் குடிப்பதன் காரணமும் வீணாகிவிடும்தானே?!'' என்று தெளிவுபடுத்திய ஷைனி, பாலைக் காய்ச்சுவதற்கான காரணத்தைக் கூறினார்.

''பசும்பாலில் இருக்கும் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள், அதைக் காய்ச்சும்போது அழிந்துவிடும். அதனால்தான் பாலைக் காய்ச்சுகிறோம். இன்று பெரும்பாலானவர்கள் பாக்கெட் பால் வாங்குகிறோம். அது ஏற்கெனவே சுத்தம் செய்யப்பட்ட பிறகுதான் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதனை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்கிற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்துவிடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி சூடாக்கி சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம்'' என்றவர், பால் காய்ச்சும் முறையைக் கூறினார்.
''பால் பொங்கியதும் உடனே இறக்கிவிடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால் பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பால் 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.

'டோன்டு மில்க்’, 'பாஸ்டரைஸ்டு மில்க்’ என்று பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கெனவே பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு இருப்பதால், அதை 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.
இந்த வகைப் பால் வாங்குபவர்கள், அதைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. சுட வைத்தாலே போதுமானது.
எந்த வகைப் பால் ஆயினும், அதை இரண்டு முறைக்கு மேல் சுட வைக்க வேண்டாம். ஒரு முறை பாலைக் காய்ச்சியபின் அதை ரெஃப்ரிஜிரேட்டரில் வைக்கலாம்.
காபி, டீ என தயார் செய்யும்போது மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் காபி/டீ தேவைப்படுகிறதோ, அந்தளவுக்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்'' என்று வழியும் சொன்னார் ஷைனி!















