சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணம...
காரைக்குடி: 4 மணிநேர 'ரோட் ஷோ' - பேசாமல் சென்ற விஜய்; ஏமாற்றமடைந்த தொண்டர்கள்! - என்ன நடந்தது?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், த.வெ.க தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். காரைக்குடி தொகுதி வேட்பாளர் பிரபுவை ஆதரித்து, கண்ணதாசன் மணிமண்டபம் அருகே உள்ள திடலில் விஜய் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
காரைக்குடி நட்சத்திர வேட்பாளர்கள் தொகுதி. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து அந்தத் தொகுதியில் கோலோச்சும் மாங்குடி என தவெக-வுக்கு சவாலான தொகுதிகளில் ஒன்று. எனவே, இந்த தொகுதியில் விஜய் என்ன பேசுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்த விஜய், அங்கிருந்து பிரத்யேக பிரசார வாகனம் மூலம் காரைக்குடி நோக்கிப் புறப்பட்டார். மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் வழிநெடுகிலும் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் திரண்டிருந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக விஜய்யின் வாகனம் மெதுவாகவே நகர முடிந்தது.
திறந்தநிலை வாகனத்தின் மேலே நின்றபடி, ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக விஜய் சாலைப் பயணம் மேற்கொண்டார்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, குறிப்பிட்ட அந்த இடத்தில் பிரசாரம் மேற்கொள்ள மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், வழியெங்கும் நிலவிய கடுமையான கூட்டத்தால் விஜய்யால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பிரசாரத் திடலுக்கு வர முடியவில்லை. அவர் பிற்பகல் 2.40 மணியளவில்தான் மேடைக்கு அருகில் வந்து சேர்ந்தார்.
அனுமதி வழங்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாலும், தேர்தல் விதிமீறல் சிக்கல்களைத் தவிர்க்கவும் விஜய் மேடையில் உரையாற்றவில்லை. வாகனத்தில் இருந்தபடியே காரைக்குடி வேட்பாளர் பிரபுவை மட்டும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

காலை முதலே சுமார் 40 டிகிரிக்கும் மேலான கடும் வெயிலில், தனது தலைவரின் பேச்சைக் கேட்கக் காத்திருந்த தொண்டர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜய் ஒரு சில வார்த்தைகளாவது பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் அறிமுகத்தோடு அங்கிருந்து புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி விஜய் வந்ததால், அங்கு நிலவிய சூழலைத் தேர்தல் அதிகாரிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர். நேரக் கட்டுப்பாடு மீறப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.















