``இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது" - நடிகை கெளரி கிஷன்
திருச்சி: அரிவாளோடு துரத்திய கும்பல்; தப்பிக்க காவலர் குடியிருப்பில் புகுந்த இளைஞர் வெட்டி படுகொலை
திருச்சி மாநகரம், பீமநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(25). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பீமநகர் அருகே உள்ள மார்சிங்பேடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், தாமரைச்செல்வனின் இரு சக்கர வாகனத்தை மோதினர். இதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அந்த கும்பல் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த தாமரை செல்வன், அவர்களிடமிருந்து தப்பிக்க அருகிலிருந்த காவலர் குடியிருப்புக்குள் சென்று அங்குள்ள வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால், அவரை துரத்தி சென்ற கும்பல் சரமாரியாக தாமரை செல்வனை வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து, தகவலறிந்த வடக்கு துணை ஆணையர் சிபின் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் விவகாரத்தில் கமிஷன் தொகையை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காவலர் குடியிருப்புக்குள் புகுந்து ஒரு கும்பல் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது குறித்து பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமூகவலைதளத்தில் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளார். பட்டப்பகலில் காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















