``இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது" - நடிகை கெளரி கிஷன்
"திமுக-வை அழிக்க SIR எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்!" - முதல்வர் குற்றச்சாட்டு
ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டியின் இளைய மகன் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,
"பழனியாண்டிக்கும், கழகத்திற்குமான உறவு என்பது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. பழனியாண்டி திருமணத்தை கடந்த 1993-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி செய்து வைத்து இருக்கிறார். 2010-ம் ஆண்டு துணை முதல்-அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின்பு பழனியாண்டியின் சகோதரருக்கு என்னுடைய தலைமையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

அதேபோல், கடந்த 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னால் பழனியாண்டியின் மூத்த மகன் திருமணத்தையும் நான்தான் செய்து வைத்தேன். இப்போது, அவரது இளைய மகனுக்கும் நான்தான் திருமணம் செய்து வைத்து இருக்கிறேன். அவரது பேரன், பேத்திகளுக்கும் நான்தான் திருமணம் செய்து வைப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படி, இந்த குடும்பத்தில் ஒருவராக தொடர்ந்து பங்கெடுத்து மணமக்களை வாழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது.
இப்படியான சகோதர பாசத்தோடுதான் இந்த கழகத்தை அண்ணா தொடங்கி, கலைஞர், இப்போது நான் என வழிநடத்தி கொண்டிருக்கிறேன். இந்த 75 ஆண்டுகாலமும் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அது தேர்தல் சமயமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது இயக்கம் நின்றது கிடையாது. இயங்கிக்கொண்டே இருந்தால் அது இயக்கம். சுறுசுறுப்பாக இருப்பதால்தான் நமது கட்சி இன்று வெற்றிகரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. சில மாதங்களாக நான் அறிவாலயத்திலே இருந்துகொண்டு உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தி ஆய்வு செய்து கொண்டு இருக்கின்றேன்.

அப்படி, ஆய்வு செய்து கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி, நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய தெம்பாக பணியாற்றக்கூடிய ஊக்கமாக இருக்கிறது. இதுவரை, 80 தொகுதிகளை முடித்துள்ளேன். விரைவிலே 234 தொகுதிகளையும் முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையுள்ளது. முடித்தே தீருவேன். கடந்த 2021 - ம் வருடம் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருபக்கம் ஆட்சிப்பணி, அரசியல் வாழ்க்கை, புதிய புதிய திட்டப்பணிகள், இன்னொருபக்கம் கட்சி பணி, வாக்காளர் திருத்தப்பணி பிரச்னை, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் என்று இப்படி ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
நாளைக்கு வாக்காளர் திருத்தப்பணியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன். அதுபற்றி கூட்டணி கட்சிகளுடன் பேசி இருக்கிறேன். நேற்றுகூட வீடியோவில் பார்த்து இருப்பீர்கள். எஸ்.ஐ.ஆர் என்றால் என்ன?. அது மக்களிடத்தில் எவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதை முறையாக எப்படி பயன்படுத்த வேண்டும்...என்ன காரணத்திற்காக கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று வீடியோ போட்டு இருக்கிறேன். அதை முடித்துக்கொண்டு விமானத்தை பிடித்து திருச்சி வந்து இருக்கிறேன். அடுத்து, புதுக்கோட்டை செல்ல இருக்கிறேன். இப்படி இயங்கிக்கொண்டிருப்பதுதான் எனக்கு பிடிக்கும்.

தொடர்ந்து, இயங்கிக்கொண்டே இருப்பதால்தான் இதனை இயக்கம் என்று செல்கிறோம். அப்படிதான் நிற்க நேரம் இல்லாமல் நாம் வேலை செய்து கொண்டு இருக்கிறோம். நான் மட்டும் அல்ல, இந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய முன்னோடிகள், செயல் வீர்கள் அனைவரும்தான். நம்மைத் தாக்குவதற்கும், நம்மை அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் புதிய புதிய முயற்சிகள் எல்லாவற்றையும் எடுத்திருக்கிறார்கள். வருமான வரித்துறையை ஏவிவிட்டார்கள்.
அதற்குப் பிறகு, குற்றப் புலனாய்வுத் துறை மூலமாக பல பல ஆயுதங்களையும் எல்லாம் எடுத்து நம்மை மிரட்டிப் பார்த்தார்கள். இப்போது, எஸ்.ஐ.ஆர் என்று சொல்லக்கூடிய ஒரு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை இதன் மூலமாகத்தான் அழிக்க முடியும், ஒழிக்க முடியும் என்று முடிவு செய்து எடுத்திருக்கிறார்கள். இது, மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும். இங்குத் தமிழ்நாட்டில் நிச்சயமாக எடுபடாது. அந்த எஸ்.ஐ.ஆர் (SIR) அவர்கள் ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கு பா.ஜ.க-வோ அல்லது தேர்தல் ஆணையமோ எதைச் சொன்னாலும் ஆதரிக்கக் கூடிய நிலையில்தான் அவர்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள் தவிர, இன்றைக்கு அடிமைகளாக இருந்து கொண்டு இருக்கிறார்களே தவிர, அவர்களால் அதை எதிர்ப்பதற்கு துணிச்சல் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் தொடுத்துள்ள வழக்கில் அவர்களும் இணைந்திருக்கிறார்கள் என்றால், ஒரு கபட நாடகத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால், அது எடுபடாது.
இன்றைக்கு டெல்லியில் இருக்கக்கூடிய பிக்பாஸிற்கு நம்முடைய பழனிசாமி 'ஆமாம் சாமி' போட்டே ஆக வேண்டும். ஆனாலும், அதையும் தாண்டி இன்னொரு வேடிக்கை பண்ணி இருக்கிறார்கள், அதுதான் உண்மை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் பேசுவதற்கு முன்பாக, வரும் 2026- ம் வருட தேர்தலை ஒட்டி பழனியாண்டி எம்.எல்.ஏ ரூ.51 லட்சம் நிதி கொடுத்து இருக்கிறார். தேர்தலின் முதல் அறிவிப்பாக இந்த திருவரங்கம் தொகுதியில் இருந்து அவர் கொடுத்து இருக்கிறார். இது, ஒரு மிகப்பெரிய வெற்றியை குறிக்கும் அறிகுறியாக அமைந்து இருக்கிறது. இந்த ரூ. 51 லட்சத்தோடு நிற்க மாட்டார். இன்னும் அதிகமான நிதியை தருவார் என்று நம்புகிறேன்.

அதேபோன்று, சமூக அமைப்பின் தலைவராக இருக்கக்கூடிய கே.கே.செல்வகுமார் பேசும்போது, கடைக்கண் பார்வையை எங்கள் பக்கம் திருப்ப சொன்னார். கடைக்கண் பார்வை இல்லை. எல்லா பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தி.மு.க-வை பொறுத்தவரை எல்லாருக்கும் எல்லாம் என்ற தலைப்பில்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. யாரையும் விட்டுவிட மாட்டோம்" என்றார்.














