செய்திகள் :

திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்: புதுக்கோட்டையில் போலீஸ் தடை! - காட்டமான ஆவணப்பட இயக்குநர்கள்!

post image

புதுக்கோட்டையில் நேற்று ( 31-5-2026 ) அரங்கேறிய அந்தச் சம்பவம், தமிழ்நாட்டின் முற்போக்கு மற்றும் ஜனநாயகச் சக்திகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மத நல்லிணக்கத்தைப் பேசும் ஒரு ஆவணப்படத்தை, அதுவும் ஏற்கனவே யூடியூபில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு படைப்பைத் திரையிடக்கூடாது என போலீஸ் ஏன் இவ்வளவு கெடுபிடி காட்ட வேண்டும்?’ என்ற கேள்விதான் இப்போது புதுக்கோட்டை மட்டுமில்லாமல் மாநிலம் முழுவதும் எழுந்துள்ளது.

புதுக்கோட்டையில் ‘வீதி’ கலை இலக்கியக் களம் என்ற தன்னிச்சையான அமைப்பு இயங்கி வருகிறது. முழுக்க முழுக்க இலக்கியம், எழுத்து, படைப்பு மற்றும் சினிமா குறித்த விவாதங்களை மட்டுமே முன்னெடுக்கும் இந்த அமைப்பின் 144-வது சந்திப்பு கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. நிகழ்வின் முக்கிய அம்சமாக, இயக்குநர்கள் தவம் மற்றும் தமிழ்தாசன் இயக்கத்தில் உருவான 'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ (Thirupparankundram Files)'என்ற ஆவணப்படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முதலில், இந்த நிகழ்ச்சி வேறொரு மீட்டிங் ஹாலில் நடப்பதாகத்தான் போஸ்டர் அடிக்கப்பட்டிருந்தது. விஷயம் உளவுத்துறைக்கு எட்ட அடுத்த நிமிடமே ஆக்‌ஷனில் இறங்கியது போலீஸ். ‘அங்கே திரையிடக் கூடாது’ என அரங்கு உரிமையாளருக்குக் கடுமையான நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிகழ்ச்சி இடத்தை மாற்றி, புதுக்கோட்டை அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில் நடத்த ஏற்பாட்டாளர்கள் முயன்றனர்.

ஆனால், அங்கும் ‘ஸ்பாட்டுக்கு’ விரைந்த போலீஸ் படை, "இந்தப் படத்தை இங்கே திரையிடக் கூடாது. இதைத் திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும். உடனே பேக்-அப் பண்ணுங்க!" என கறாராக உத்தரவிட்டது.

திடீரென பாய்ந்த இந்தத் தடையால் அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஆவணப்பட இயக்குநர்களும் போலீஸாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

"எஸ்.ஐ.மேடம்.. இந்தப் படத்தை நாங்க ஏதோ ரகசியமா எடுக்கல. கடந்த பிப்ரவரி மாசம் சென்னையில இருக்குற ‘ஃபோர்த் ஃபிரேம்’ தியேட்டர்ல, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் முன்னிலையில்தான் இதை ரிலீஸ் செய்தோம். இதுவரைக்கும் நாலு இடங்களில திரையிட்டாச்சு. யூடியூப்லயும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க இதைப் பார்த்திருக்காங்க. இது யாருடைய மனதையும் புண்படுத்துற படம் கிடையாது; மாறாக, இந்து - இஸ்லாமிய மத நல்லிணக்கத்தை வலியுறுத்துற படம்!" என்று இயக்குநர்கள் தவம், தமிழ்தாசன் மற்றும் 'வீதி' அமைப்பினர் காவல்துறையிடம் நியாயம் கேட்டனர்.

ஆனால், " இது மேலிடத்து உத்தரவு...வேற எதையும் கேட்க முடியாது, திரையிட அனுமதிக்க மாட்டோம்" என்பதில் போலீஸ் பிடிவாதமாக இருக்கவே, அங்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. பின்னர் ஆவணப்படம் திரையிடுவதை தவிர்த்து இந்த படம் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்கவும், இதற்கான கண்டனக் கூட்டமுமாக அந்த நிகழ்வு மாறியது.

இதுபற்றி கூட்டத்தில் பேசிய ஆவணப்பட இயக்குநர்கள் தமிழ்தாசன் மற்றும் தவம் ஆகியோர்,

"நாங்கள் ஒன்றும் சினிமா பின்னணி கொண்டவர்கள் அல்ல; எங்களுக்குப் படம் எடுத்த அனுபவமும் கிடையாது. ஆனால், திருப்பரங்குன்றத்தைச் சுற்றி திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளையும், கட்டுக்கதைகளையும் உடைத்து, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில்தான் இந்த ஆவணப்படத்தை உருவாக்கினோம்.

வெறும் எழுத்து வடிவில் சொல்வதை விட, காட்சிப் பதிவாக கொண்டு சென்றால் தான் மக்களிடம் வேகமாகச் சேரும். இதற்காகக் கிட்டத்தட்ட 40 மணி நேரக் காட்சிகள் (Footage) எடுத்தோம். அதைச் சுருக்கிச் சுருக்கி, தற்போது 1 மணி நேரம் 17 நிமிடங்கள் கொண்ட ஆவணப்படமாக மாற்றியுள்ளோம். இதற்குப் பின்னால் பலரின் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது." என்றார்.

தொடர்ந்து பேசிய தமிழ்தாசன், "சட்டப்படி இந்த மலை யாருக்குச் சொந்தம் என்று நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சொல்லவே நாங்கள் கேமராவுடன் களமிறங்கினோம். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் நீண்ட கால அரசியல் திட்டங்களைக் கண்டு அதிர்ந்துபோனோம். திருப்பரங்குன்றத்தில் சில முக்கியப் பிரச்சினைகளைச் சில அரசியல் சக்திகள் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்:

இவை அனைத்தும் தற்செயலாக நடப்பவை அல்ல, குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதைகள். இதைத்தான் எங்கள் படம் அட்ரஸ் செய்கிறது!" என்றார் ஆவேசமாக.

திருப்பரங்குன்றத்தின் நிஜமான நிலவரம் குறித்துப் பேசிய இயக்குநர் தமிழ்தாசன்

"அயோத்தியில் உள்ளூர் மக்களின் ஆதரவு கிடைக்காததால்தான், வெளியூர் ஆட்களைக் கொண்டு வந்து ஒரு பிரச்சினையைப் பெரிய விஷயமாக்கினார்கள். அதேபோலத்தான் திருப்பரங்குன்றத்திலும் நடக்கிறது. உள்ளூர் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்; அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வெளியூர் ஆட்கள்தான் வந்து பிரச்சினையைத் தூண்டுகிறார்கள்.

ஏற்கனவே வெளியான ‘கந்தன் மலை’ என்ற படம் யூ டியூப்பில் 10 லட்சம் வியூஸ்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 1996-ல் அங்கிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வலுவான கிளையை எதிர்த்து தோழர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட இடதுசாரிகள் போராடினார்கள். ஆனால், இன்று புதிய தலைமுறையிடம் இடதுசாரி அரசியல் களம் பின்னடைவைச் சந்தித்துள்ளதால், அங்கு இயக்கங்களை முன்னெடுக்க ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைச் சில சக்திகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

சிறுபான்மையினராக இருக்கும் 3% மக்கள் பெரும்பான்மையினருடன் இணைந்து போவதை விட, 97% இருக்கும் பெரும்பான்மை இந்து மக்கள் அந்த 3% சிறுபான்மையினரை எப்படித் தங்களின் அண்ணன், தம்பியாக ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக நடத்துகிறார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் நிஜமான மத நல்லிணக்கம்.

கிராமப்புறத் திருவிழாக்களில் இஸ்லாமியர்களுக்குக் கோயில் சார்பில் முதல் மரியாதை மற்றும் பரிவட்டம் கட்டும் வழக்கங்கள் இன்றும் உள்ளன. மதுரையில் ஊரை விட்டுச் சென்ற இஸ்லாமியர்களை மீண்டும் மேளதாளத்துடன் அழைத்து வந்து முதல் மரியாதை செய்யும் சான்றுகளை எங்கள் படத்தில் காட்டியிருக்கிறோம்.

பணம் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்திற்குத் தேவையான பொருளாதார உதவியில் 90% வழங்கியது இந்துக்கள் தான். இந்த நிஜமான மதநல்லிணக்க மரபைத்தான் காவல்துறை திரையிடக் கூடாது என்று தடுக்கிறது!" என்று குமுறினார்.

"வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பௌத்தம், இஸ்லாம், சமணம் போன்ற மதங்கள் அவற்றின் பிறப்பிடங்களில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அகநானூறு, திருமுருகாற்றுப்படை போன்றவற்றில் இது முருகனின் தலமாகக் குறிப்பிடப்பட்ட அதே சமகாலத்தில், அங்கு சமணர்களின் படுக்கைத்தளங்களும் இருந்துள்ளன. எனவே, இந்த மலை பல சமயங்களின் தொகுப்பாகவே இருந்துள்ளது.

தர்கா மற்றும் பள்ளிவாசல்களில் உள்ள தூண்கள், கோயில்களில் இருப்பது போன்றே பழமையான அமைப்பைக் கொண்டுள்ளன. இது தமிழ்நாட்டின் மற்றும் கேரளாவின் பாரம்பரிய கட்டடக்கலை மரபாகும். எந்த மதம் வந்தாலும் அதிலுள்ள நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்வதுதான் தமிழர்களின் மரபு. எகிப்தில் 'சிகைக்கொற்றன்' பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தது போல நம் பண்பாடும் உலகெங்கும் பரவியுள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி கருத்துரிமையை நசுக்குவது எந்த விதத்தில் நியாயம்?

கருத்துச் சுதந்திரத்தை காவல்துறை இப்படித்தான் பாதுகாப்பதா? இந்தத் தடையின் மூலம் இந்தப் படம் இன்னும் பல மடங்கு வேகத்தில் மக்களைச் சென்றடையும். இன்னும் கூடுதல் விவரங்களோடு, அடுத்ததாக ' திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் - பகுதி 2’ கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். அனைத்து சமூக மக்களின் ஆதரவோடு எங்களின் கருத்துப் பயணம் தொடரும்!" என்று அதிரடியாக முடித்தனர் இயக்குநர்கள் தமிழ் தாசனும், தவமும்.

காவல்துறையின் இந்த தடையைக் கண்டித்து தமுஎகச மாநில துணைத்தலைவர் கவிஞர் நா.முத்து நிலவன், புதுக்கோடை மாவட்டச் செயலாளார் ஆலங்குடி வெள்ளைச்சாமி, உலகத் திரைப்படங்கள் சங்கத் தலைவர் இளங்கோ, எழுத்தாளர் பாரதி தம்பி ஆகியோர் தங்களின் கண்டனங்களைப் பதிவு செயததுடன் யூ-டியூப் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை பெரும்பான்மை மக்களிடம் நாம் கொண்டுபோய்ச் சேர்ப்பது நம் அனைவரின் கடமை என்றனர்.

"உண்மையைத் திரையில் காட்டினால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடுமா..?" என்ற கேள்வியோடு கலைந்தனர் அங்கிருந்த படைப்பாளிகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும்.!

”அடுத்த ஜெம்னத்திலும் எளிய தொண்டனாக இருக்கணும்” - உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக நிர்வாகி உருக்கம்

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்கார தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(32). பூக்கடை நடத்தி வந்த இவர் அதிமுக-வில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளராகப் பொறுப்பில... மேலும் பார்க்க

``இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள்; வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்' - அதிமுக ராஜ் சத்யன்

அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தவெகவில் இணைந்த நிலையில் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் த... மேலும் பார்க்க

`நேபாளமும் இந்தியாவில் ஆக்கிரமித்துள்ளது; இப்போ தான் தெரியவந்தது' - அதிர்ச்சி கிளப்பிய நேபாள பிரதமர்

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனை தற்போது ஒரு புதிய அதிரடி திருப்பத்தை சந்தித்துள்ளது. "இந்தியா மட்டும்தான் நேபாளத்தின் பகுதிகளை ஆக்கிரமித்... மேலும் பார்க்க

வாக்களித்த மக்களுக்கு 'நன்றி' சொல்ல திருச்சிக்கு செல்கிறார் முதல்வர் விஜய் | Live updates

திருச்சி செல்கிறார் விஜய்தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் நின்று களம் கண்டார். இந்த இரண்டு தொகுதிகளிலுமே மக்கள் விஜ... மேலும் பார்க்க

"நான் நினைத்திருந்தால் துணை முதல்வர் பதவியை விஜய் கொடுத்திருப்பார்; ஆனால்..." - பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (மே.31) நடைபெற்றது.இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "பேரத்திற்கும் பதவிக்கும் சோஃபாவு... மேலும் பார்க்க