Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டெ...
தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அருகிலுள்ள கொளக்கட்டான் குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும் படித்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், தொலைதூரக் கல்வியில் இளங்கலை படிப்பதற்காக கட்டணம் செலுத்திவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது உமாவை தொடர்பு கொண்ட ராஜேஷ், அவருடன் சமாதானமாக பேசியுள்ளார்.
பின்னர், மாலையில் உமாவை கஸ்தூரிரெங்கபுரம் பகுதியிலிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இன்ஸ்டாகிராமில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது எனவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் ராஜேஷ் வற்புறுத்தினாராம்.

இதற்கு உமா மறுக்கவே அவரை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். இதில், உமா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்ற ராஜேஷ் நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளார். கொலைச் சம்பவம் நடந்த பகுதி கழுகுமலை என்பதால், கழுகுமலை போலீஸாரிடம் ராஜேஷை ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அளித்துள்ள வாக்குமூலத்தில், “நானும் உமாவும் காதலித்து வந்தோம். இதற்கிடையில் அவர், இன்ஸ்டாகிராமில் சக நண்பர்களுடன் பேசிப் பழகி வந்ததால், எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. சமாதானம் செய்யவே அவரை வரச்சொன்னேன். ஆனால், அவர் உடன்படவில்லை. கோபத்தில் கழுத்தை நெரித்ததில் அவர் மயங்கினார்.

உடனே 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். ஆனால், அவரை பரிசோதித்த நர்ஸ், உமா இறந்துவிட்டாதாகக் கூறினார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் போலீஸில் சரணடைந்தேன்” எனக் கூறியுள்ளார். காதலியை காதலனே கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.




















